ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஏராளமான படங்கள் வெளியாகின்றன.
அவற்றில் ஒருசில படங்கள் எதிர்பார்த்த வெற்றியும், சில படங்கங்கள் சுமாரான வெற்றியும், இன்னும் சில படங்கள் தோல்வியையும் தழுவுகின்றன. வழக்கம்போல் 2014ம் ஆண்டும் தமிழ் சினிமாவில் இன்பமும் துன்பமும் கலந்தே இருந்தது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இதுவரை மொத்தம் 213 படங்கள் வெளியாகி சாதனை படைத்துள்ளது. இவை அனைத்துமே நேரடித் தமிழ் படங்களாகும். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 200 படங்கள் வெளிவருவது இதுவே முதல் முறை.
கடந்த ஆண்டு 157 படங்களே வெளிவந்தன. அதேசமயம் 2012ல் 130க்கும் மேற்பட்ட படங்களும், 2011ல் 125க்கும் மேற்பட்ட படங்களும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவற்றை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த ஆண்டு வெளியான படங்களும் அதிகம், வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கையும் அதிகம்.
ஒரு வாரத்துக்கு சராசரியாக நான்கு படங்களுக்கும் மேல் வெளியானதால் வெளியிட போதிய அரங்குகள் கிடைக்காமல் பட அதிபர்களும், பார்க்க முடியாமல் ரசிகர்களும் கொஞ்சம் திண்டாடித்தான் போனார்கள். இந்த ஆண்டில் வெளியான படங்களில் 25 படங்களுக்கு மேல் வெற்றி பெற்றன மற்றும் தப்பித்துவிட்டன எனலாம். கோலி சோடா, தெகிடி, மான் கராத்தே, குக்கூ, என்னமோ நடக்குது, யாமிருக்க பயமே, வீரம், மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, சதுரங்க வேட்டை, வேலை இல்லா பட்டதாரி, ஜிகிர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், சலீம், அரண்மனை, நாய்கள் ஜாக்கிரதை, பிசாசு, மெட்ராஸ், கத்தி, பூஜை, வெள்ளக்கார துரை உள்ளிட்ட படங்கள் அவற்றில் சில..
குறிப்பாக இந்த ஆண்டு கமல் ஹாசன், விக்ரம் தவிர தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகி அவரவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தின. ரஜினிகாந்த் நடித்த இரண்டு பெரிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகின. ஒன்று கோச்சடையான், மற்றொன்று லிங்கா. ஆனால் இந்த இரண்டு படங்களும் ரஜினியை ஏமாற்றியது. அதேபோல் விஜய்க்கும் ஜில்லா, கத்தி என இரு படங்கள் வெளியாகின. அதில் கத்தி மட்டும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தை பொறுத்தவரையில் அவர் நடித்த வீரம் மட்டுமே வெளிவந்தது.
ஆனால் இந்தப் படம் அனைத்து தரப்பினரையும் திருப்பிபடுத்தியது. இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் ஒரே ஒரு படம் மட்டும் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்தப் படம் தோல்வியை தழுவியது. அதேநேரத்தில் 2014ம் ஆண்டில் இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, ருத்ரைய்யா, இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், காதல் தண்டபாணி, பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி, தயாரிப்பாளர் இராம.நாராயணன், ஒளிப்திவாளர் அசோக்குமார் உள்ளிட்ட கலைஞர்களையும் இழந்திருக்கிறது தமிழ் சினிமா.