ஒரு காலத்தில் ஹீரோக்கள் மட்டுமே ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்ட காலம் போய், தற்போது வில்லன்கள் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ஹீரோக்களாக இருந்து பின்னர் வில்லன்களாக மாறியவர்கள் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்த வருடம் வெளியான ‘ஐ’, ‘என்னை அறிந்தால்’, ‘அனேகன்’ ஆகிய படங்களின் வில்லன்கள், சினிமா உலகில் முன்னாள் கதாநாயகன்கள். ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்த சுரேஷ் கோபி மலையாள திரையுலகில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். ஐ படம் மூலம் வில்லனாக மாறி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
அதேபோல் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான அருண் விஜய், தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருடைய வில்லத்தனம் ஹீரோவாக நடித்ததை விட அதிகபடியான ரசிகர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தில் கார்த்திக் வில்லனாக நடித்திருந்தார். இவர் 80-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். சிறந்த நடிகர் என்று பெயர் பெற்ற இவர் அனேகன் படம் மூலம் வில்லனாக நடித்து, வில்லனிலும் நான் சிறந்த நடிகர் என்று நிரூபித்திருக்கிறார்.