நடிகர் சங்க செயற்குழு நாளை மறுநாள் (28–ந்தேதி) சென்னையில் கூடுகிறது. இதில் திருட்டு வி.சி.டி.யை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
செயற்குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி, துணை தலைவர்கள் விஜயகுமார், காளை, பொருளாளர் வாகை சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சிம்பு, சத்யபிரியா, நளினி, சார்லி, சின்னஜெயந்த், ஸ்ரீகாந்த், குண்டு கல்யாணம், குயிலி, மனோ பாலா, சகுந்தலா, கே.ஆர்.செல்வராஜ், எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.
திருட்டு வி.சி.டி. திரைப்பட துறைக்கு பெரிய சவாலாக இருக்கிறது. படம் ரிலீசான மறுநாளே திருட்டு வி.சி.டி.க்கள் கடைகளுக்கு வந்து விடுகின்றன. இதை எப்படி தடுப்பது என்பது குறித்து செயற்குழுவில் ஆய்வு செய்யப்படுகிறது.
நடிகைகள் ஆபாச படங்கள் இணையதளங்களில் சமீபத்தில் அதிகம் பரவி வருகின்றன. இதில் பெரும் பாலான படங்கள் மார்பிங் செய்யப்பட்ட போலி படங்கள் என தெரியவந்துள்ளது. ஓட்டல் அறையில் நிர்வாணமாக குளிப்பது போன்ற வீடியோ படங்களையும் ரகசியமாக எடுத்து வெளியிட்டு உள்ளனர்.
இதனால் ஓட்டல்களில் தங்க நடிகைகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த பிரச்சினை குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப் படும் என தெரிகிறது.
திருட்டு வி.சி.டி. பிரச்சினை குறித்து சரத்குமார், கூறும் போது சண்டமாருதம், அனேகன், ‘ஐ’ படதிருட்டு வி.சி.டிக்களை எங்கள் சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கைபற்றி போலீசில் ஒப்படைத்தனர். திருட்டு வி.சி.டி. விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டு வி.சி.டிக்களை தடுப்பதற்காகவே டைரக்டர் சேரன் வீடுகளுக்கு நேரடியாக புதுப்படம் சி.டி.க்களை சப்ளை செய்யும் சிடுஎச் அமைப்பை துவக்கியுள்ளார். அவர் முயற்சிக்கு ஆதரவு கொடுப்போம்.
நான் நடித்துள்ள சண்டமாருதம் படம் வெற்றிகரமாக ஓடுகிறது. இதில் நாயகன், வில்லன் என இரு வேடங்களில் நடித்துள்ளேன். வில்லன் வேடத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன. தொடர்ந்து ஏ.வெங்கடேஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி இயக்கும் படங்களில் நடிக்க உள்ளேன் என்றார்.