திரையுலகம் எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. இது மாதிரி ஒரு புதுமாதிரியான கதை இதுவரை பார்த்ததில்லை. நிஜக் காதலர்களே நாயகன் நாயகியாக நடித்து பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி எல்லாம் இணைந்து அமைந்த ஒரு ஹிஸ்டரி இது.
பெரும்பாலும் படத்தில் நடிக்கும் போது நாயகன் நாயகிகள் யாரோ இருவராக வருவார்கள். நடிக்க வந்த பிறகு காதலில் விழுந்து இருவர் ஒன்றாகி படப்பிடிப்புக் குழு கலைந்த பின்னும் அவர்கள் மணமாகி இணைவது நடக்கும். இப்படித்தான் பாக்யராஜ்- பூர்ணிமா, பார்த்திபன் -சீதா, செல்வமணி -ரோஜா, சூர்யா- ஜோதிகா போன்று பல ஜோடிகள் உருவானார்கள்.
ஆனால் ‘இருவர் ஒன்றானால்’ படத்தில் நடிக்க வந்த நாயக நடிகர் பி.ஆர்.பிரபுவும், நாயகி நடிகை கிருத்திகா மாலினியும் படத்தில் நடித்த போதே 6 ஆண்டு அனுபவமுள்ள நிஜக் காதலர்கள் என்பது மாறுபட்ட அனுபவம் மட்டுமல்ல, இது நிச்சயமாகப் புதுமைதானே?
தனது காதல் அனுபவம் மற்றும் படத்தில் இணைந்தது குறித்து பி.ஆர்.பிரபு கூறியதாவது:-
எனக்கு சொந்த ஊர் சேலம். வீட்டுக்கு ஒரே பையன் நான். அப்பா அட்வகேட். நான் சென்னையில் இந்துஸ்தான் கல்லூரியில் பி.இ.முடித்தேன். பிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தேன். இந்தப் படிப்பு குடும்பத்தினர் திருப்திக்காகப் படித்தது. எனக்கு சினிமா ஆர்வம் உண்டு. நண்பர்கள் தொடர்பில் பல படப்பிடிப்புகள் சென்று ஒரு உதவி இயக்குநர் போல இழுத்துப் போட்டுக் கொண்டு வேலைகளைச் செய்ததுண்டு. இப்படி ஏ.ஆர்.முருகதாசின் பல படங்களில் வேலைகளைப் பார்த்ததுண்டு.
அப்போதுதான் சம்பத்குமார், அன்பு.ஜி பழக்கமானார்கள். அவர்கள் தனியாகப் படமெடுக்க முடிவு செய்தபோது நான் நடிப்பது என்றானது. ஒரு கதாநாயகி தேடியபோது நான் என் காதலி கிருத்திகா மாலினியை பற்றிக் கூறினேன். நேரில் பார்த்துவிட்டு தேர்வு செய்தார்கள்.
நான் சினிமாவுக்கு வருவது என்று முடிவெடுத்த போது அதற்காக டான்ஸ் கற்றுக் கொண்டேன். அப்போது கிருத்திகா மாலினிக்கும் எனக்கும் பழக்கமாகி, காதலிக்க ஆரம்பித்தோம். காதலித்து ஆறு ஆண்டுகள் ஆனபின்புதான் சினிமாவில் ‘இருவர் ஒன்றானால்’ படத்தில் இணைந்து நடித்தோம்.
கிருத்திகா எப்போதும் ஜாலியாக சந்தோஷமாக இருப்பவர். சுருக்கமாகச் சொன்னால் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா மாதிரி கேரக்டர். ஆனால், இந்தப் படத்தில் நேர் எதிர்மாறான கேரக்டர் அவர்.
படப்பிடிப்பு முடிந்ததும் காதலர்தினத்தின் மறுநாள் 15.2.2015ல் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சேலத்தில் திருமணம் நடந்தது. 17ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் தனது காதல் அனுபவம் மற்றும் இருவர் ஒன்றானால் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கிருத்திகா மாலினியும் விளக்கினார்.