“காக்கா முட்டை” திரைப்படத்தில் வழக்குரைஞர்கள் குறித்து அவதூறு காட்சி இருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அழைப்பாணை (சம்மன்) அளித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்த விவரம்: சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில், அகில இந்திய வழக்குரைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து “காக்கா முட்டை’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் வழக்குரைஞர் தொழிலைப் பற்றியும், வழக்குரைஞர்களைப் பற்றியும் அவதூறான வார்த்தைகளில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
எனவே, இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன், இயக்குநர் மணிகண்டன், அவதூறு காட்சியில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ரமேஷ் ஆகியோர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி முருகன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்தார். மனுதாரர் மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்று, எதிர்மனுதாரர்கள் தனுஷ், வெற்றிமாறன், மணிகண்டன், ஐஸ்வர்யா ரமேஷ் ஆகிய 4 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அவர்களுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.
0