தளபதி விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள ’தளபதி 65’ திரைப்படம் குறித்து தினந்தோறும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்திற்காக விஜய் தனது சம்பளத்தில் ரூபாய் 20 கோடியை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
‘தளபதி 65’ படத்திற்காக விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருந்ததாகவும் இந்த சம்பளம் ’அண்ணாத்தத’ படத்தில் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளத்தை விட அதிகம் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது உள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் விஜய் தனது சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் கேட்டு கொண்டதற்கு இணங்க குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகளில் வசூல் குறைவாக இருக்கும் என்பதால், அனைத்து நடிகர்களும் தங்களது சம்பளத்தை தாங்களாகவே முன்வந்து குறைத்து தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலையாள திரையுலகில் அனைத்து நடிகர்களும் 50% தங்கள் சம்பளத்தை குறைத்து கொண்டதாகவும் அதே போல் தெலுங்கு துறையிலும் பாலிவுட் திரையுலகில் பல முன்னணி நடிகர்களும் தங்களது சம்பளத்தை குறைத்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து தயாரிப்பாளரின் சிரமத்தை புரிந்து கொண்ட விஜய் ரூபாய் 20 கோடி தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாகவும், ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறியதை விஜய் தரப்பினர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் கைவிடப்பட்டதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்தவுடன் கண்டிப்பாக தொடரும் என்றும் தளபதி விஜய்யின் வட்டாரங்கள் கூறுகின்றன.