உலக தமிழர்களுக்கு அறிமுகமான ‘சந்தன வனவாசி’ வீரப்பனின் வாரிசான விஜயலட்சுமி, ‘மாவீரன் பிள்ளை’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குநர் கே. என். ஆர். ராஜா தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் முதல் திரைப்படம் ‘மாவீரன் பிள்ளை’.
இதில் முதன்மையான வேடத்தில் வீரப்பனின் வாரிசான விஜயலட்சுமி நடித்திருக்கிறார். இவருடன் ராதா ரவி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவிவர்மா இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார். இயக்குநரும், நடிகருமான பேரரசு படத்தில் இசையை வெளியிட்டார்.
நிகழ்வில் நடிகை விஜயலட்சுமி பேசுகையில், ” பால்ய காலத்திலிருந்து நடிக்க வேண்டும் எனும் விருப்பம் இருந்தது. எம்முடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
தற்போதைய சமூகத்தில் ஒரு பக்கம் மது… மறுபக்கம் காதல்… என்ற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள். இதனை மையப்படுத்தி ‘மாவீரன் பிள்ளை’ திரைப்படம் தயாராகி இருக்கிறது.
மக்களிடத்தில் மது, காதல் ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். நிச்சயமாக எம்முடைய தந்தையாரின் நற்பெயரை காப்பாற்றுவேன்” என தெரிவித்தார்.