Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் மீண்டும் இழுபறி!

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் மீண்டும் இழுபறி!

1 minutes read

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது என்று அந்தக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனினும், மாநாடு நடைபெறும் வரைக்கும் பொதுச்செயலாளர் பதவி இழுபறி நிலை தொடரும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு வாக்கெடுப்பின் ஊடாக நடைபெற்று முடிந்திருந்தது. அதற்கு அமைவாக சிறீதரன் தெரிவாகியிருந்தார். இதன் பின்னர் கட்சியின் ஏனைய நிர்வாகப் பதவிகளுக்கான தெரிவு தொடர்பான மத்திய குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் என்பன கடந்த மாதம் திருகோணமலையில் நடைபெற்றன. பொதுச்செயலாளர் உட்பட நிர்வாகக் குழுவுக்கான பெயர்கள் மத்திய குழுவில் தெரிவு செய்யப்பட்டு அது பொதுக் குழுவுக்குப் பாரப்படுத்தப்பட்டது. பொதுக் குழுவில் இதன்போது குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்சியின் தேசிய மாநாடும் ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்பாக பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் குழப்பம் நீடித்தது. பொதுச்செயளாளராகத் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவர் சண்முகம் குகதாசனின் பெயர் பிரேரிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனுடைய பெயரும் அந்தப் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டிருந்தது. இதனால் குழப்பம் நீடித்தது.

இது தொடர்பில் ஆராயும் கூட்டம் வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் சி.சிறீதரனும் பங்கேற்றிருந்தார்.

இழுபறி நிலையிலிருந்த பொதுச்செயலாளர் பதவியை குகதாசன் மற்றும் ஸ்ரீநேசன் இருவருக்கும் சுழற்சி முறையில் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில் முதலாவது வருடம் யார் பொதுச்செயலாளர் பதவியை வகிப்பது என்பதிலேயே இழுபறி நிலை நீடித்த நிலையில் அதற்கு தற்போது இணக்கம் காணப்பட்டது. முதலாவது வருடம் குகதாசனுக்கும், அடுத்த வருடம் ஸ்ரீநேசனுக்கும் வழங்க தற்போது இணக்கம் காணப்பட்டது.

இதற்கு அமைவாக எதிர்வரும் 19ஆம் திகதி கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் நடைபெறவுள்ளது என்று கட்சியின் தலைவர் சிறீதரன் தெரிவித்தார்.

எனினும், நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் விடயம் எதிர்வரும் 19ஆம் திகதி – திங்கட்கிழமையன்று – காலையில், திருகோணமலையில், கட்சியின் தேசிய மாநாட்டுக்கு முன்னர் பொதுக் குழு கூடும்போது, சுவாலை விட்டு விளாசி எரியும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More