மூக்குத்தி அணிவது என்பது ஓர் அடையாளச் சின்னமாகும். இந்தியாவில் திருமணம் முடிந்த பெண்களும், திருமணம் ஆகாத பெண்களும் பரவலாக மூக்குத்தியை அணிந்திருக்கின்றனர்.
இந்திய பண்பாட்டில் மூக்குத்தியைப் பற்றி ஏராளமான நம்பிக்கைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, 16ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்குப் பகுதியில் இருந்து வந்து இந்தியாவின் மீது படையெடுத்த முகலாயர்கள் மூலமாக மூக்குத்தி அணியும் பழக்கம் இந்தியாவிற்கு வந்தது. அது நாளடைவில் இந்தியா முழுவதும் பரவியதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு வழக்கம் ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். எனவே, பெண்கள் மூக்குகுத்தி குற்றிக்கொள்ளும் வழக்கம் உருவானதாகவும் கூறப்படுகிறது.
மூக்குத்தி அணிவது ஏன்?
மூக்குத்தி அணிவது பலவிதமான அடையாளப் பொருட்களைக் கொண்டிருக்கிறது. அதாவது மூக்குத்தி அணிவது என்பது பண்பாட்டை வெளிப்படுத்துவதாகவோ அல்லது பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாகவோ அல்லது ஒருவருடைய அழகை மேலும் மெருகேற்றிக் காட்டுவதாகவோ அமைகிறது.
பெண்கள் மூக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.
ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி, அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து, தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப் பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்கு குத்தப்படுகிறது.
மூக்குத்தி அணிவதன் நன்மைகள் :
மூக்குக் குத்துவதால் சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். மேலும் பெண்களின் மாதவிடாய் வலியைக் குறைக்க மூக்குத்தி உதவுவதாக நம்பப்படுகின்றது.