மலைமுகட்டில் ஊற்றெடுக்கும்
அருவிபோல…
மண்பிளந்து முளைதள்ளும்
விதைகள்போல….
என்கவிதை இனியது
என்கவிதை அழகானது.
சூளைநெருப்புக்குள்
சுதந்திரமாய் முகையவிழ்ந்து
ஏழை இதயங்களை
அரவணைத்த என்கவிதை
கோழைகளைக் குறிவைக்கும்
அடிமை கொள்ள
நினைப்பவர்க்கெதிராய்
என்கவிதை ஆர்த்து எழும்.
விடியலுக்காய் என்கவிதை
வீணையென இசைசுரக்கும்
மண்விடிய வேண்டுமென்று
மனதில் நினைத்தபடி
மரணிக்கும் தியாகிகளை
என்கவிதை அஞ்சலிக்கும்.
எவர்வீட்டின் முன்னின்றும் எனை
ஏற்றுக்கொள் என்று சொல்லி
என் கவிதை இரக்காது.
தென்றலோடு கைகோர்க்கும்
தேடிவரும்
புயலோடு போர்தொடுக்கும்.
சிறுமதியார் முகம்கண்டால்
சீறியெழும் என்கவிதை
இனியபல இலட்சியங்கள்
ஏந்திநிற்கும் என்கவிதை
வேசமிடுவோரை
வெடிகுண்டாய்ச் சிதைக்கும்
எண்ணற்ற இடர்வந்து
என்முன்னாற் குவிந்தாலும்
என்கவிதை நிமிர்ந்துநிற்கும்!
ஆதிலட்சுமி சிவகுமார்