எகிப்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 38 பேர் உயிரிழந்தனர். 41 பேர் பலத்த காயமடைந்தனர்.
எகிப்தின் தெற்கு சினாய் பகுதியில் உள்ள ஷரம் அல் ஷேக் எனும் சுற்றுலாத்தளம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. இரு பேருந்துகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 80க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் எகிப்தியர்கள். 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளது. காயமடைந்த நால்வரில் இருவர் சவுதியை சேர்ந்தவர்கள். ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர். மற்றவர் உக்ரைனை சேர்ந்தவர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்துக்கு 30 ஆம்புலன்சுகள் உதவிக்கு சென்றன.