காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுசம்பந்தமாக வாராந்திர ரீதியிலான கூட்டத்தில் இன்று இஸ்லாமாபாத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் தஸ்நிம் அஸ்லாம் கூறியதாவது:-
காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி பொதுவாக்கெடுப்பு நடத்தியே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். காஷ்மீர் விவகாரம் ஒரு சட்டப்பிரச்சனை. பொது வாக்கெடுப்பை வலியுறுத்தும் காஷ்மீர் மீதான ஐ.நா. தீர்மானத்திற்கு இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ஒரு மாற்றுத்தீர்வாக இருக்காது. இந்தியாவுடன் போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தினால் ஐ.நா. தீர்மானத்தை செயலிழக்க வைத்துவிட முடியாது. பாகிஸ்தான் உயர் கமிஷனர் அப்துல் பாசித் ஷரியத் தலைவர்களை சந்தித்தில் எந்த தவறும் இல்லை. பாகிஸ்தான் எப்போதுமே அவர்களிடம் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.