எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு வழங்குவதாக, கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளில் தமிழ் தலைமைகள் விலை போவது வேதனை அளிக்கும் விடயம் என்றும் எழுக தமிழில் நாம் கேட்பது தமிழர்களுக்கான நீதியைத்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வட.கிழக்கில் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், தமிழ்களின் இன்றைய மற்றும் எதிர்கால இருப்பினைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை என பல விடயங்களில் இன்றும் இலங்கை அரசாங்கம் நீதியைத் தர மறுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, தமிழர்களின் உரிமைகளினை வென்றெடுக்க கரம் சேர்க்கும் வகையில், அனைவரும் எழுத தமிழ்ப் பேரணிக்கு ஆதரவினை வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழர் விடுதலைக் கூட்டணியும் இந்தப் பேரணிக்கு அதரவினை தற்போது வழங்கியுள்ளது.
தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வை தூண்டுவதற்கு எழுக தமிழ் பேரணி பெரும் பங்காற்றுவதாகவும், இதற்கு தமிழ் மக்கள் அனைவரும் பூரண ஆதரவை வழங்கி அதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அந்தக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
அதேநேரம், தென்னிந்தியாவின் நடிகரும், தமிழ் உணர்வாளருமான சத்தியராஜும் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவினை தெரிவித்து தற்போது காணொலியொன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் விசேடமாக தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தமது அழுத்தங்கள் தொடரும் என்றும் அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.