தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும் எழுக தமிழ் பேரணி யாழில் இடம்பெறவுள்ளது.
வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களை அணித்திரட்டும் இந்த பேரணி தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் இரண்டு பேரணிகள் காலை 9 மணிக்கு ஆரம்பமாகின்றன.
இந்த பேரணிகள் யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளி திடலில் முடிவடையவுள்ளன. அங்கு எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அத்துடன் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் உரையாற்றவுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இலங்கை போர்க்குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்து, எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணையை நடத்து, தமிழ்ப் பகுதிகளில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, போரினால் இடம்பெயர்ந்த அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து ஆகிய ஆறு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இந்த எழுக தமிழ் பேரணி நடத்தப்படுகிறது.
எழுக தமிழ் பேரணியில் பங்கேற்க வவுனியா, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்களை ஏற்றி வருவதற்காக 35 இற்கும் அதிகமான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய எழுகத் தமிழ் பேரணிக்கு 60இற்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவைத் தெரிவித்திருப்பதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த பேரணிக்கு ஆதரவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்குமாறு, தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் வடக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் ஏனைய அரச பணிகளும் இன்றைய தினம் வழமைப் போன்று இடம்பெறும் என ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.