யார் நியாயமின்றி சிறையில் இருக்கின்றார்கள்? கடந்த ஆட்சிக்காலத்தில் அப்பாவிகளைக் கடத்திவைத்து கப்பம் பெறும் நடவடிக்கைகளுக்குத் துணைபோன இராணுவத்தினரும், திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் 11 பேரைக் கொல்வதற்குத் துணைபோனவர்களும், குடிநீர் கேட்டுப்போராடிய மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியவர்களுமே சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தம்பர அமில தேரர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமானது. அக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 தம்பர அமில தேரர் க்கான பட முடிவு

சஜித் பிரேமதாஸவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் மக்கள் வருகை தந்திருக்கிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும், 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத அரசியல் நெருக்கடியின் போதும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு சிவில் சமூக அமைப்புக்கள் பெரும் பங்காற்றின. அதன் அடுத்தகட்டமாகவே தற்போதும் நாமனைவரும் ஒன்றிணைந்திருக்கின்றோம்.

2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த போதிலும், பல்வேறு சிறந்த செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரணியிலிருந்தவர்கள் இடங்கொடுக்கவில்லை. அவற்றை மீண்டும் தொடர்வதற்காகவே இப்போது சஜித் பிரேமதாஸவை முன்நிறுத்தியிருக்கின்றோம். அதனை இலக்காகக் கொண்டு இப்போது அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்திருக்கின்றன.

இப்போது நாட்டில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் வலுவடைந்திருக்கிறது. அதனடிப்படையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 52 நாள் சதிப்புரட்சியும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையின் காரணமாகத் தோற்கடிக்கப்பட்டது. நாங்கள் இந்ந நாட்டில் உயிருடன் இருக்கும் வரையில் நீதித்துறையின் சுயாதிபத்தியத்தில் கைவைப்பதற்கு எவருக்கும் இடமளிக்க மாட்டோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது அநுராதபுர தேர்தல் பிரசாரக்கூட்டத்தில், தான் ஆட்சிக்கு வந்தால் நியாயமின்றி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினரை விடுவிப்பதாகக் கருத்தொன்றை முன்வைத்தார். யார் நியாயமின்றி சிறையில் இருக்கின்றார்கள்? கடந்த ஆட்சிக்காலத்தில் அப்பாவிகளைக் கடத்திவைத்து கப்பம் பெறும் நடவடிக்கைகளுக்குத் துணைபோன இராணுவத்தினரும், திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் 11 பேரைக் கொல்வதற்குத் துணைபோனவர்களும், குடிநீர் கேட்டுப்போராடிய மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியவர்களுமே சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலே தவிர, பிரதம நீதியரசரை நியமிப்பதற்கான தேர்தல் இல்லை. நீதிமன்றத்தினால் குற்றச்செயலொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு இல்லை.

அவ்வாறிருக்க கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையின் ஹிட்லராகுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறார். கோத்தபாய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்பச் செயலாளராக இருந்தபோது ஊடகவியலாளர்கள் அச்சத்தினால் ஓடினார்கள். ஓடாதவர்களை அவர் படுகொலை செய்தார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்குவந்து, ஊடகவியலாளர்களைக் கண்டால் கோத்தபாய ராஜபக்ஷ ஓடக்கூடிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளர்களை பொதுவான மக்கள் மேடைக்கு விவாதத்திற்காக அழைத்தபோது கோத்தபாய வரவில்லை. அவருடைய பழைய குணவியல்புகள் இன்னமும் மாறவில்லை. அதிகாரத்தின் மீதான மோகம் மாறவில்லை. அவரால் கடந்த ஆட்சியின் போது எத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நினைவில் வைத்திருப்பவர்கள் அவருக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்.