வடக்கு மாகாண மக்களின் வலியை தீர்ப்பேன் என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுராக பதவி ஏற்றுக்கொண்ட ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் முதற் பெண் ஆளுநராக இன்று நண்பகல் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வருகை தந்த ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. மதத் தலைவர்களின் ஆசிகளைத் தொடர்ந்து ஆளுநர் செயலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இந்திய துணைத் தூதுவர் எஸ். பாலச்சந்திரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ. பத்திநாதன், அரச அதிகாரிகள் உட்பட பலர கலந்துகொண்டனர்.