June 5, 2023 11:24 am

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மூஸ் ஆடைகள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு 2023-2027 காலப்பகுதிக்கான உத்தியோகபூர்வ கிரிக்கெட் ஆடை (Jersey) விநியோக அனுசரணையாளர்களாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் Moose Clothing Company (மூஸ் க்ளோதிங் கம்பனி) இணைந்துகொண்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கான ஜேர்ஸிகளை மூஸ் க்ளோதிங் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசிப் ஓமரிடம் இருந்து இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன பெறுவதைப் படத்தில் காணலாம். (படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)

இதற்கான புதிய உடன்படிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணிகள் பங்குபற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), ஆசிய கிரிக்கெட் பேரவை (ACU) ஆகியன நடத்தும் கிரிக்கெட் போட்டிகள் உட்பட சகல வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கான ஆடைகளை மூஸ் க்ளோதிங் கம்பனி வழங்கவுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்த அனுசரணை அமுலுக்கு வருகிறது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் Moose Clothing Companyக்கும்  இடையிலான ஒப்பந்தம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பும் ஆடை அறிமுக வைபவமும் கொழும்பு ரமடா ஓட்டலில் வியாழக்கிழக்கிழமை (26) இரவு நடைபெற்றது.

மூஸ் க்ளோதிங் கம்பனி தங்களுடன் இணைவதையிட்டு பெருமிதம் கொள்வதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொதுச் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய மொஹான் டி சில்வா, ‘கேள்வி பத்திர விண்ணப்பங்கள் கோரப்பட்டே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடை  அனுசரணையாளர்களாக     மூஸ் க்ளோதிங் கம்பனி தேர்ந்தெடுக்கப்பட்டது. நிறுவனத்தின் நற்பெயர், அதன் நம்பகத்தன்மை மற்றும் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டதன் மூலம் பெறப்பட்ட அனுபவங்கள் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு அந்த நிறுவனத்தை எமது கிரிக்கெட் அணிகளின் ஆடை அநுசரணையாளர்களாகத் தேர்வு செய்தோம். முன்னைய ஆடை பங்குதாரர்களைவிட அதிக விலைகோரல் மனுவை மூஸ் க்ளோதிங் கம்பனி சமர்ப்பித்திருந்தது. மூஸ் நிறுவனத்துடனான மிகவும் பயனுள்ள பங்காளித்துவம் நீண்டகாலத்திற்கு தொடரும் என நம்புகிறோம்’ என்றார்.

இலங்கையில் இளமை மற்றும் பல்துறை வர்த்தக நாமமாக விளங்கும் மூஸ் ஆடை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் இணைந்து நவநாகரிகம் மற்றும் ஆடை உற்பத்தி ஆகியவற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது. அத்துடன் இலங்கை கிரிக்கெட்டைப் போன்று உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடையவுள்ளது.

இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட  மூஸ் க்ளோதிங் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசிப் ஓமர், ‘இலங்கையின் இரண்டு பிரதான பலம்வாய்ந்த துறைகளான ஆடை உற்பத்தித் தொழில் மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை ஒன்றிணைப்பதை இந்தப் பங்காளித்துவம் நோக்காகக் கொண்டுள்ளது. மூஸ் ஆடைகளின் அற்புதமான படைப்பாற்றல், திறமை மற்றும் வலிமை ஆகியவற்றை உலக அரங்கில் வெளிப்படுத்த இந்தப் பங்களாளித்துவத்தைப் பயன்படுத்த விரும்புகிறோம். இலங்கையில் நவநாகரிகம் மற்றும் ஆடைத் துறைகளில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்த இது எங்களுக்கு பெரிதும் உதவும் என நம்புகிறோம். இது குறித்து நாங்கள் மிக நீண்டகாலமாக கலந்துரையாடி வந்துள்ளோம். இந்த முயற்சி உயரிய நிலைகளை எட்ட உதவும் என நம்புகிறோம் ‘ என்றார்.

இந்த வைபவத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, மூஸ் க்ளோதிங் கம்பனியின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி கித்மினி டி சில்வா, இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன, மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து,  உட்பட இலங்கை கிரிக்கெட் வீர, வீராங்கனைகள் சிலரும் கலந்து கொண்டனர்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்