Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்டில் 5 விக்கெட்களால் வெற்றிபெற்ற இந்தியா தொடரையும் கைப்பற்றியது

இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்டில் 5 விக்கெட்களால் வெற்றிபெற்ற இந்தியா தொடரையும் கைப்பற்றியது

2 minutes read

இங்கிலாந்துக்கு எதிராக ரஞ்சி சர்வதேச விளையாட்டுத் தொகுதி விளையாட்டரங்கில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய இந்தியா 5 போட்டிகளில் ஒரு போட்டி மீதம் இருக்க டெஸ்ட் தொடரை 3 – 1 என கைப்பற்றியது.

இந்த வெற்றியுடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தை மேலும் பலப்படுத்திக்கொண்டுள்ளது.

அப் போட்டியில் 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா அன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் காரணமாக போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினம் இந்தியா இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மொத்த எண்ணிக்கை 84 ஓட்டங்களாக இருந்தபோது யஷஸ்வி ஜய்ஸ்வால் 37 ஓட்டங்களுடனும் 15 ஓட்டங்கள் கழித்து ரோஹித் ஷர்மா 55 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

ரோஹித் ஷர்மாவின் விக்கெட் உட்பட 4 விக்கெட்கள் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிய இந்தியா தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (120 – 5 விக்.)

எனினும் ஷுப்மான் கில், த்ருவ் ஜுரெல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றியையும் தொடர் வெற்றியையும் உறுதிசெய்தனர்.

ஷுப்மான் கில் 124 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸ்கள் உட்பட 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

தனது 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் த்ருவ் ஜுரெல் ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றார். அவர் முதல் இன்னிங்ஸிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 90 ஓட்டங்களைப் பெற்றார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவைப் போன்றே இங்கிலாந்தும் சுழல்பந்துவீச்சாளர்களை பிரதானமாக பயன்படுத்தியது. ஆனால், இந்திய சுழல்பந்துவீச்சாளர்களைப் போன்று இங்கிலாந்து சுழல்பந்துவீச்சாளர்களால்  சாதிக்க முடியாமல் போனது.

பந்துவீச்சில் ஷொயெப் பஷிர் 79 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின் முதல் இரண்டு தினங்களில் இங்கிலாந்து பலமான நிலையில் இருந்தது. ஆனால், 3ஆம் நாளன்று எல்லாம் தலைகீழாக மாறியது.

இளம் வீரர் த்ருவ் ஜுரெல் பெற்ற 90 ஓட்டங்களும் ரவிச்சந்திரன் அஷ்வினின் 5 விக்கெட் குவியலும் இந்தியாவுக்கு திருப்புமுனையாக  அமைந்தன.

3ஆம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்தபோது இந்தியா 46 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்தது.

ஆனால், அன்றைய தினம் இங்கிலாந்தை இரண்டாவது இன்னிங்ஸில் 145 ஓட்டங்களுக்கு சுருட்டியதன் மூலம் வெற்றிக்கான வாய்ப்பை பலப்படுத்திக்கொண்ட இந்தியா, அந்த வெற்றியை இன்றைய தினம் உறுதிசெய்துகொண்டது.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 353 (ஜோ ரூட் 122 ஆ.இ., ஒலி ரொபின்சன் 58, பென் ஃபோக்ஸ் 47, ஸக் குரோவ்லி 42, ஜொனி பெயாஸ்டோ 38, ரவிந்த்ர ஜடேஜா 67 – 4 விக்., ஆகாஷ் தீப் 83 – 3 விக்., மொஹமத் சிராஜ் 78 – 2 விக்.)

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 307 (த்ருவ் ஜுரெல் 90, யஷஸ்வி ஜய்ஸ்வால் 78, {ப்மான் கில் 38, ஷொயெப் பஷிர் 119 – 5 விக்., டொம் ஹாட்லி 68 – 3 விக், ஜேம்ஸ் அண்டசன் 48 – 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 145 (ஸக் குரோவ்லி 60, ஜொனி பெயாஸ்டோ 30, ரவிச்சந்திரன் அஷ்வின் 51 – 5 விக், குல்தீப் யாதவ் 22 – 4 விக்.)

இந்தியா (வெற்றி இலக்கு 192) 2ஆவது இன்: 192 – 5 விக். (ரோஹித் ஷர்மா 55, ஷுப்மான் கில் 52 ஆ.இ., த்ருவ் ஜுரெல் 39 ஆ.இ., யஷஸ்வி ஜய்ஸ்வால் 37, ஷொயெப் பஷிர் 79 – 3 விக்.)

ஆட்டநாயகன்: த்ருவ் ஜுரெல்

இந்த டெஸ்ட் போட்டியின் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அணிகள் நிலை வருமாறு:

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More