Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பூட்டானை வீழ்த்தியது இலங்கை | கால்பந்தாட்டத்திலிருந்து விடை பெற்றார் பஸால்

பூட்டானை வீழ்த்தியது இலங்கை | கால்பந்தாட்டத்திலிருந்து விடை பெற்றார் பஸால்

3 minutes read

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் திங்கட்கிழமை (25) இரவு மின்னொளியில் நடைபெற்ற பூட்டானுக்கு எதிரான பீபா சீரிஸ் 2024 கால்பந்தாட்டப் போட்டியில் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.

இதேவேளை, நீண்டகாலமாக முதல் தர கழகங்களுக்காகவும் தேசிய அணிக்காகவும் விளையாடிவந்த மொஹமத் நைஸர் மொஹமத் பஸால் நேற்றைய போட்டியுடன் சர்வதேச கால்பந்தாட்ட விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.

கோல் காப்பாளரும் அணித் தலைவருமான சுஜான் பெரேரா, ஆதவன் ராஜமோகன், டிலொன் டி சில்வா, வசீம் ராஸீக், ஒலிவர் ஜேம்ஸ் கெலார்ட ஆகியோரின் கூட்டு செயற்பாடுகளினாலேயே இலங்கை 2 கோல்களையும் போட்டது.

அவர்களில் டிலொன் டி சில்வாவும் வசீம்  ஒலிவர் ஜேம்ஸ் கெலார்ட்டும் தலா ஒரு கோலை போட்டனர்.

இந்த வீரர்களுடன் செபமாலைநாயகம் ஜூட் சுபன், ஹர்ஷா பெர்னாண்டோ, பாரத் சஞ்சய் அன்தனி சுரேஷ், சலன சமீர, ஜெக் டேவிட் ஹங்கேர்ட், ஜேசன் தயாபரன் ஆகியோரும் முதல் பதினொருவர் அணியில் இடம்பெற்று மிகச் சிறப்பாக விளையாடினர்.

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட முதலாவது பகுதியில் டிலொன் டி சில்வா அவ்வப்போது கோல் போட எடுத்த முயற்சிகள் அவரது சுயநலம் காரணமாகத் தவறிப் போயின.

ஆனால், அவர் வேகமாக பந்தை நகர்த்திச் செல்லும் விதம் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அதேவேளை, வலது முன்வரிசையில் சலன சமீர, முன்வரிசையில் வசீஸ் ராஸீக் ஆகியோர் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிய போதிலும் அவை பலன்தரவில்லை.

ஜூட் சுபன் மிகவும் சாதுரியமாக நீண்ட பந்துபரிமாற்றங்களை செய்து கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கினார். அதேபோன்று மத்திய மற்றும் பின்களத்திலும் எதிரணியின் முயற்சிகளைக் அவர் கட்டுப்படுத்தி பாராட்டுதல்களைப் பெற்றார்.

ஹர்ஷா பெர்னாண்டோவின் நீண்ட, நேர்த்தியான த்ரோ இன்கள் எதிரணியைப் பிரமிக்கவைத்தது. ஆனால், இலங்கை வீரர்களால் அதனையும் முறையாகப் பயன்படுத்த முடியாமல்போனது.

இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோது பூட்டான் பின்வரிசை வீரர் ஒருவர் உதைத்த பந்தை நோக்கி மத்திய களம் வரை ஓடிச் சென்ற இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா பந்தை நெஞசினால் தடுக்க முற்பட்டார். ஆனால், பந்தைத் தட்டிப் பறித்த பூட்டான் அணித் தலைவரும் இண்டியன் லீக் கால்பந்தாட்ட வீரருமான சென்கோ ஜியெல்ஷென் 40 யார் தூரத்திலிருந்து வெறுமனே இருந்த கோலை நோக்கி உதைத்தார்.

ஆனால், இலங்கையின் பின்கள வீரர் ஜெக் டேவிட் ஹிங்கெர்ட் பின்னோக்கி வேமாக ஓடி 6 யார் கட்டத்துக்குள் பந்தை நிறுத்தி கோல் போவதைத் தடுத்தார்.

அத்துடன் முதலாம் பகுதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது மைதனாத்தின் மையத்திலிருந்து கோல் காப்பாளர் சுஜான் பெரேராவை நோக்கி பந்தை தரையோடு டிலொன் டி சில்வா உதைத்தார்.

அப் பந்தை தனது பாதத்தால் கட்டுப்படுத்திய சுஜான் பெரேரா, அங்கிருந்து சுமார் 50 யார் தூரத்திற்கு பந்தை உயர்த்தி செலுத்தினார்.

பாரத் சஞ்சய் அன்தனி சுரேஷ், வசீம் ராஸீக், ஒலிவர் ஜேம்ஸ் கேலார்ட் ஆகியோர் தலைகளால் பந்தை முட்டி பரிமாற்றங்களில் ஈடுபட்டனர். இறுதியாக பந்தைப் பெற்ற டிலொன் டி சில்வா சற்று கடினமான கோணத்திலிருந்து பந்தை கோலினுள் செலுத்தி இலங்கையின் முதலாவது கோலைப் பதிவுசெய்தார்.

நான்கு நிமிடங்கள் கழித்து டிலொன் வேகமாகப் பரிமாறிய பந்தை வசீம் ராஸீக் தலையால் முட்ட பூட்டான் கோல்காப்பாளர் ஹரி குரங் தனது முஷ்டியால் அதனைத் தடுத்தார்.

போட்டியின் 53ஆவது நிமிடத்தில் மீண்டும் சுஜான் பெரேரா உயர்த்தி உதைத்த கோல் கிக் பந்தை பெற்றுக்கொண்ட ஆதவன் ராஜமோகன் அதனை வசீம் ராஸீக்குக்கு பரிமாறினார்.

பந்தை ராஸீக் முன்னோக்கி நகர்த்திச் சென்று உதைத்தபோது அது பூட்டான் கோல்காப்பாளரின் பாதித்தில் பட்டு இடது புறமாக மேலெழுந்தது. மேலேழுந்த பந்தை டிலொன் தலையால் முட்டியபோது பந்து வலது கம்பத்தில் பட்டு முன்னோக்கி வந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் மிக வேகமாக செயற்பட்ட ஒலிவர் டெவிட் கெலார்ட் பந்தை கோலினுள் புகுத்தி இலங்கையை 2 – 0 என முன்னிலையில் இட்டார்.

 

இதனிடையே பூட்டான் வீரர்கள் கோல் போடுவதற்கு எடுத்த சில முயற்சிகளை கோல்காப்பாளர் சுஜான் பெரேரா அலாதயாக தடுத்து நிறுத்தினார்.

அதன் பின்னர் இலங்கை அணியில் மாற்று விரர்கள் களம் இறக்கப்பட்டனர். கால்பந்தாட்ட விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த எம்.என்.எம். பஸாலுக்கு உபாதையீடு நேரத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு பிரியாவிடை வழங்கப்பட்டது.

மாற்று வீரர்களில் மொஹமத் ஆக்கிப் மிக வேகமாக பந்தை நகர்த்தி கோல்போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிய போதிலும் அவை பலன் தராமல் போயின. அவருக்கு கோல் போடுவதற்கு பாரத் ராகுலின் சகோதரர் கவின் அன்தனி சுரேஷும் மாற்ற வீரராக விளையாடினார்.

கடைசி நிமிடங்களில் களம் இறக்கப்பட்ட பஸாலுக்கு கோல் போடுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்ட போதிலும் அவரால் அதனை முறையாக பயன்படுத்த முடியாமல் போனது.

போட்டி முடிவடைந்த பின்னர் முன்னாள் தேசிய வீரர் பஸாலை இலங்கை வீரர்கள் உயர்த்தி தூக்கியவாறு பாராட்டி கௌரவித்து சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து பிரியாவிடை வழங்கினர்.

சுமார் 16 வருடங்கள் பிரதான கழங்களிலும் 5 வருடங்களுக்கு மேல் தேசிய அணியிலும் விளையாடிய பஸால் தற்போது ஸாஹிரா கல்லூரியின் பயிற்றுநர் குழாத்தில் இணைந்து பணியாற்றுகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More