Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை அல்வாயின் அகள்விளக்கு கலாமணி! | ஐங்கரன் விக்கினேஸ்வரா

அல்வாயின் அகள்விளக்கு கலாமணி! | ஐங்கரன் விக்கினேஸ்வரா

2 minutes read

 

வடமராட்சியில் கடந்த 1987 ‘ஒப்பரேஷன் லிபரேஷன்’ போது நடந்தேறிய கொடுமைகளின் கோரங்களையும் சிதைவுகளையும் முதலாவதாக ஆண்டு நினைவு கூர்வாகக் கொண்டு வெளியாகும் “கல்லறை மேலான காற்று”கவிதைத்தொகுதிக்கு முன்னுரை ஒன்று அவசியம்தானா என்பது இன்னமும் வினாவாகவே என்னிடம் உள்ளது என ஆசான் கலாமணியின் வார்த்தைகள் இன்னமும் என் மன நினைவுகளில் பதிந்துள்ளது.

இப்படித் தான் எங்கள் இலக்கிய நட்பு முகிழ்ந்தது. காற்றுக் கூட அனலாக வீசிக்கொண்டிருந்த 1988 போர்க் காலகட்டம். அவ்வேளையிலும் விடியலை நோக்கிய எழுச்சியில் சண்டமாருதமாய் எழுந்து நின்ற இளங் கவிஞர்களின் படைப்பே
“கல்லறை மேலான காற்று” எனும் கவிதை தொகுப்பாகும்.

வடமராட்சி ஒப்பரேஷன் லிபரேஷன்

கொடூர நினைவுகளின் அழியாத, அனல் வீசும் கவிதை தொகுப்பை ஈரோசின் மாணவர் இளைஞர் பொது மன்றத்தால் (GUYS) 1988 இல் வெளியிடப்பட்டது.

இந்நூலின் முன்னுரையில் ‘விமர்சனமாக அமையக் கூடாதென்பதனால் கவிதைகள் பற்றி தனித்தனியாகவே கருத்துக்கூறுதல் பொருத்தமன்று எனினும் இக்கவிதைகள் யாவுமே, இராணுவக் கொடுமைகள் எம்மிடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதை வெளிக் காட்டும் பொதுப்பண்பைத் தம்மகத்தே எனக்கூறுதல் சாலப் பொருந்தும். வடமராட்சியில் நிகழ்ந்த கொடுமைகளைக் கூறும் வகையிலும் இதற்கு ஓர் இடமுண்டு’ என எழுதியுள்ளார் ஆசான் கலாமணி.

வடமராட்சி “ஒப்பரேஷன் லிபரேஷன்” ஓராண்டு நினைவுக் கவிதைகளை படைத்த இளங் கவிஞர்களின் படைப்பான “கல்லறை மேலான காற்று” எனும் கவிதை தொகுப்பாக்கு ‘அல்வைக் கலா’ எனும் எங்கள் பேராசான் கலாநிதி த. கலாமணி 31-05-1988 இல் எழுதிய முன்னுரையாகும்.

அண்மையில் கலாமணியின் மைந்தன் பரணீதரனுடன் ஆசானின் முன்னுரைகளை தொகுத்து நூலாக்க வேண்டும் என கலந்துரையாடினோம். அவர் வாழும் போதே நூலாக்க வேண்டும் என முயன்றோம். எனினும் அவருக்கு சமர்ப்பணமாக அந்நூல் விரைவில் வெளிவரும்.

கல்வியியல் துறை ஆசான்:

யாழ் பல்கலைக்கழக கல்வியியல் துறை ஆசானாகிய கலாநிதி தம்பிஐயா கலாமணி (1952.02.04) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த பிரபல்யமான நாடகக் கலைஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழக பௌதீகவியற் பட்டதாரியன இவர், இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர். தனது தந்தையிடம் நாடகம், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் போன்ற பல துறைகளையும் கற்றுக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘நாட்கள் , கணங்கள் நமது வாழ்க்கை’ என்பதாகும். இவர் ‘ஒப்பிலாமணியே’ என்ற குறும்படத்தையும் நடித்துள்ளார். 1974 முதல் சிறுகதை எழுத ஆரம்பித்து 35 ஆண்டுகளில் 30 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியற் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

வடமராட்சியின் மூத்த விருட்சமாக என்றும் விளங்கும் கலாமணி ஆசான் படைத்த படைப்புக்கள் பல. அவற்றுள் அம்மாவின் உலகம், இலக்கியமும் உளவியலும், இளையோர் இசை நாடகம், ஏனிந்தத் தேவாசுர யுத்தம், காலநதியின் கற்குழிவு, ஜீவநதி நேர்காணல்கள் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

அல்வாய் மண்ணின் அகள்விளக்காக ஒளிவீசிய ஆசான் கலாமணியின் திரு ஊஞ்சல்- கொற்றாவத்தை சிறப்பாவளை அவதாரக் கண்ணன் ஸ்ரீ ரமணன் திருவுடையாள்: பிரதேசமலர் 2011, நதியில் விளையாடி, நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள்,பாட்டுத் திறத்தாலே, புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும், பெளதிக விஞ்ஞானக் கலைச்சொற்கள், மாற்றம் காணும் கல்வி உலகுடன் இணைதல், வடமராட்சி வலயக்கல்விச் சமூகம் முன்னெடுக்கும் ஆசிரியர் மகாநாடு 2016 ஆகியன இவரது மண் வாசம் வீசும் நூல்களாகும்.

IMG_7167.jpg

அல்வாயின் அகள்விளக்கு:

மனோகரா நாடகசபாவின் இயக்குனரான இவர், வாலிவதை, சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, ஶ்ரீவள்ளி, கோவலன் கண்ணகி, பூதத்தம்பி, பாஞ்சாலி சபதம் நாடகங்களில் நடித்துள்ளார். இவரது எனது நாட்களின் கணங்கள் நமது வாழ்க்கைகள் சிறுகதை நூலுக்கு, வடக்கு- கிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால் சிறந்த நூலுக்கான விருது 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மண்வாசனை வீசும் எழுத்தை தன் உயிராக நேசித்த அல்வாயின் அகள்விளக்கு கலாமணி நேற்று (2024பெப்ரவரி 9) நள்ளிரவில் விண்ணேவிய தகவல் மனதை நெருடியது. வடமராட்சியில் முகிழ்ந்த பெருவிருட்சமான கலாமணி ஆசான் என்றும் புதிய தலைமுறைகளுக்கான வழிகாட்டியாய் இருப்பார்.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More