ட்விட்டர் சமூகதளத்தை 43 பில்லியன் டொலர் கொடுத்து வாங்குவதற்கு உலகின் பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில், ட்விட்டர் நிர்வாக சபை அதற்கு எதிராக செயற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மஸ்கின் திட்டத்தை சமாளிக்க “பொய்சன் பில்” என்று அழைக்கப்படும் “வரையறுக்கப்பட்ட கால பங்குதாரர் உரிமைகள் திட்டம்” என்ற முறை கையாளப்பட்டுள்ளது.
இதன்மூலம் நிறுவனத்தில் எவரேனும் 15 வீதத்திற்கு மேல் பங்குகள் பெறுவது தடுக்கப்படுகிறது. இது ஏனையோர் தள்ளுபடியில் மேலதிக பங்குகளை வாங்குவதற்கு அனுமதிக்கிறது.
மஸ்க் ட்விட்டரை கைப்பற்றுவதற்கு கோரப்படாத, பிணைப்பற்ற திட்டத்தை முன்வைத்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ட்விட்டர் நிர்வாக சபை குறிப்பிட்டுள்ளது
எலோன் மஸ்க், ட்விட்டரில் தற்போது 9.2 வீத பங்குகளை வாங்கியுள்ளார். மஸ்க் அதிகப்படியான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார்.
மஸ்க் பங்கு முதலீடு அறிவித்த உடனே ட்விட்டர் நிறுவனத்தின் முக்கியமான முதலீட்டாளராக இருந்த வேன்கார்ட் கூடுதலாக முதலீட்டை பெற்று நிர்வாகக் குழுவில் மஸ்க்கை காட்டிலும் கூடுதலான ஆதிக்கத்தைப் பெற்றது. இதேபோன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிங்டம் நிறுவனமும் கூடுதலான ட்விட்டர் பங்குகளைப் பெற்றுள்ளது.
ட்விட்டர் தனது சமூகதளத்தில் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று தான் நம்புவதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டரில் அமெரிக்க அரசியலமைப்பு உரிமை ஒன்றான பேச்சு சுதந்திரத்தை விரிவுபடுத்துவதே தனது பிரதான நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.