தென்னிந்தியாவின் தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரிகமப இசை நிகழ்ச்சி ஆரம்பமாகியிருந்தது. இதில் இலங்கையில் இருந்து இரு சிறுமிகள் பங்கேற்றிருந்தனர்.
மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமது திறமைகளை வெளிப்படுத்திருந்தனர்.
இதில் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது ஆளாக கில்மிஷா தெரிவாகியிருந்ததுடன், அஷானி இறுதித் தருணத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார்.
பல கட்டங்களில், பல சுற்றுகளில் இந்த இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்ததுடன், மக்களின் அமோக ஆதரவையும் பெற்றிருந்தனர்.
அந்த வகையில், இன்றைய தினம் (17) இறுதிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இறுதிப்போட்டி இடம்பெற்றது.
ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தனர்.
அவர்களில் கில்மிஷா முதலிடம் பிடித்ததுடன், சரிகமப நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இம்முறை லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கு ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றிருந்தனர்.