இங்கிலாந்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் நடத்தை மோசமாவதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது, இங்கிலாந்து பள்ளி மாணவர்களின் மோசமான நடத்தை காரணமாக இந்த ஆண்டு ஐந்தில் ஓர் ஆசிரியர் ஒரு மாணவரால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பிபிசியின் கணக்கெடுப்பு கூறுகிறது.
திட்டுதல், எச்சில் துப்புதல் மற்றும் நாற்காலியை வீசுதல் ஆகியவை இங்கிலாந்து பள்ளிகளில் அடிக்கடி நடப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா தொற்று காலத்திற்குப் பின்னர் பள்ளி மாணவர்களிடமிருந்து மோசமான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் குறித்து ஆசிரியர்கள் புகார் செய்வதாக ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், பள்ளிகளை ஆதரிப்பதற்காக நடத்தை மையங்களில் £10m முதலீடு செய்துள்ளதாக கல்வித் துறை (DfE) கூறுகிறது.
டீச்சர் டாப் என்ற சர்வே கருவியைப் பயன்படுத்தி, பிபிசி நியூஸ் இங்கிலாந்தில் உள்ள 9,000 ஆசிரியர்களிடம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வகுப்பறையில் நடத்தை தொடர்பான அவர்களின் அனுபவங்களைப் பற்றிய தொடர் கேள்விகளைக் கேட்டது.
ஆரம்ப மற்றும் இடைநிலை ஆசிரியர்களில் பெரும்பாலோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மாணவர்கள் அடிக்கடி சண்டையிடுவதாக தெரிவித்துள்ளனர்.
அதில் ஓர் ஆசிரியர், இங்கிலாந்து பள்ளி மாணவர்களின் நடத்தை “நிச்சயமாக மோசமாகி வருகிறது” என்றும் சில சமயங்களில் “எப்போதும் முடிவடையாத போராக இதை உணர்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஒரு சந்தர்ப்பத்தில் “வகுப்பறை முற்றிலும் சூறையாடப்பட்டது” என்றும் “சுவரில் இருந்து போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன” என்றும் குறித்த ஆசிரியர் கூறியுள்ளார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், வகுப்பிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையுடன் மீண்டும் அறைக்குள் நுழைய முயன்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.