ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் காணிகளை கடந்த வருட இறுதியில் மக்களிடம் முழுமையாக மீள வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்த நிலையில், குறித்த காலம் முடிந்து 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் 3ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மக்களுடைய நிலம் தொடர்ந்தும் படையினர் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது மீள்குடியேற்ற நிலைமைகள் குறித்து ஆராயும்போதே, நாடாளுமன்ற சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “2018ஆம் ஆண்டு மாா்கழி மாதத்திற்கு முன்னர் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகள் அனைத்தும் மக்களிடமே மீள வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன காலக்கெடு வழங்கினார்.
அந்த காலக்கெடு நிறைவடைந்து 9 மாதங்கள் கடந்து கொண்டிருக்கும் நிலையிலும் படையினரின் கட்டுப்பாட்டில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருக்கின்றது.
குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் புறமாக பெருமளவு நிலம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அந்த நிலம் பொதுமக்களுக்கு சொந்தமான மிகப் பெறுமதியான விவசாய நிலமாகும்.
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவரிடம் இந்த விடயங்களைக் கூறி மக்களுடைய காணிகளை மீள அவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறினார். இதற்குப் பதிலளித்த ஆளுநர், தாம் ஜனாதிபதிக்கு இந்த விடயத்தை நினைவுப்படுத்துவதாக கூறினார்.