Wednesday, April 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கண்ணீருக்கு பதில் இல்லை | கடந்த 3 வருட போராட்டம்

கண்ணீருக்கு பதில் இல்லை | கடந்த 3 வருட போராட்டம்

3 minutes read

கடந்த மூன்று வருடங்களாக தமது உறவுகளை இழந்த நிலையில் போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் 72 தாய், தந்தையரை இழந்து மிகவும் வலியுடனும், வேதனையுடனுமே போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

போராட்டங்கள் கவன ஈர்ப்பு பேரணி ஊடாக எமது பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் கவனத்தினை ஈர்க்கும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு 30ஆம் திகதி மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து அமைதி ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

இதற்கு பொது அமைப்புகளும், பொதுமக்களும், பல்கலைக்கழக மாணவர்களும், மதகுருமார்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கழக உறுப்பினர்கள், விளையாட்டுக்கழகங்கள், வர்த்தக சங்கங்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்கள், தமிழ் தேசியத்தின்பால் செயற்படும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கலந்துகொண்டு ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதன்மூலம் காணாமல்போனவர்களை மீட்பதற்கான பாரிய அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்கி சர்வதேசம் ஊடாக எங்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கு அனைவரும் எங்களுடன் இணையுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இன்றைய நிலைமையினை கருத்தில் கொண்டு, தற்போது கொரோனா அச்சுறுத்தல் காலம் என்ற காரணத்தினால் முக கவசங்களை பயன்படுத்தி, சமூக இடைவெளிகளைப் பேணியவாறு இந்த பேரணியில் பங்குபற்றி சர்வதேச ரீதியில் எங்களுக்கான தீர்வினை வழங்க அனைவரும் எங்களுடன் தோள் கொடுக்க முன்வரவேண்டும்.

பொலிஸ் மற்றும் சுகாதார துறையினரிடம் அனுமதிகளைப் பெற்று இந்த பேரணியை மேற்கொள்வதனால் அனைவரும் அச்சமின்றி கலந்துகொண்டு உங்களை ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களும் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. பேரணி கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்திபூங்காவினை வந்தடைந்ததும் அங்கு ஐ.நா மனித உரிமைகள் சபைக்கான கடிதம் கையளிக்கப்படும்.

கடந்த மூன்று வருடங்களாக பாரிய கவன ஈர்ப்பு போராட்டங்களை நடாத்திவருகின்றோம். நாங்கள் இன்று 72 தாய், தந்தையர்களை இழந்த நிலையில் அவர்களின் பிள்ளைகளையும் தேடும் கடமையிலும் பொறுப்பிலும் நாங்கள் இருக்கின்றோம்.

எதிர்வரும் காலத்தில் நாங்கள் கூட இல்லாமல் போகலாம். நாங்கள் எங்களுக்காக வீதியோரங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்களை பேரணிகளை நடத்தவில்லை.

உங்களது சந்ததிகள் எதிர்வரும் காலங்களில் தற்போதுள்ள அரசியல் சூழலில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான போராட்டங்களை நடத்துகின்றோம்.

இந்த பிரச்சினைகைள உங்கள் பிரச்சினைகளாக கொண்டு தெருக்களில் இருந்து அழுது புலம்பிக் கொண்டிருக்காமல் உங்களது சந்ததிகளை பாதுகாக்க வேண்டுமானால் எதிர்காலத்தில் சிறந்த தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு எங்களுடன் இணைந்து போராட முன்வரவேண்டும்.

எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு வடக்கில் யாழ். குடாவிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் கவன ஈர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தாங்கள் எமது உறவுகள் எங்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற மனவேதனையுடனேயே இந்த பேரணியில் பங்குபற்றவுள்ளோம்.

எதிர்வரும் காலங்களில் நாங்கள் கூட இல்லாமல் போகலாம். நாங்கள் எங்களுக்காக இந்த போராட்டங்களை வீதியோரங்களில் இருந்து நடாத்தவில்லை, தற்போதுள்ள இறுக்கமான அரசியல் சூழலில் எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாக வாழும் உரிமையினைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான போராட்டங்களை நடத்தி வருகின்றோம் என்று கூறியுள்ளார்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தாங்கள் செயற்பட்டு வருவதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட தலைவி த.செல்வராணி தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More