மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட்டினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை உத்தியோகப்பூர்வமாக முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் உள்ள விடயங்கள் அண்மையில் கசிந்திருந்த நிலையில், தற்போது உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அந்த அறிக்கைக்கான பதில் நிலைப்பாட்டை அரசாங்கம் நேற்று (புதன்கிழமை) மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட்டினால் முன்வைக்கப்படவுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையில், இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக, மாற்று சர்வதேச பொறிமுறைகள் குறித்து ஆராயுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய முறையில் அவதானம் செலுத்தப்படாதுள்ளமை, மீண்டும் அவ்வாறான மனித உரிமை மீறல்கள் ஏற்படுவதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் நிலைமை, இராணுவமயமாக்கல் உள்ளிட்ட விடயங்கள் கவலையளிப்பதாக உள்ளன எனவும் யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் இந்த அரசாங்கம் தடுக்கும் வகையில் செயற்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளை அதிகரிக்கச் செய்த கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறுவதற்கான சமிக்ஞைகள் உருவாகியுள்ளன என்றும் போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இருதரப்ப்பினரதும் மனித உரிமை மீறல்கள் குறித்து நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது என்றும் இதன் காரணமாக, கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சிறிய முன்னேற்றத்தை, பின்னோக்கிச் செல்வதற்கு செயற்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் முன்னாள் இராணுவ மற்றும் புலனாய்வு பிரிவின் 28 அதிகாரிகள், நிர்வாக பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த ஆண்டு, போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில், அவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட தரப்பினர் குறித்து ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு அரசாங்கங்கள் நியமித்த வெ்வேறு ஆணைக்குழுக்கள் விசாரணைகளை நடத்தியபோதும் உண்மைகளை நம்பகத்தன்மையை வெளிக்கொண்டுவரவும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தவறிவிட்டன எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தேசிய அளவில் தீர்வு காண்பதற்கான இயலாத நிலையிலும் ஆர்வமற்றத்தன்மையிலும் இருப்பதால், சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கா, சர்வதேச சமூகம் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் ஊக்குவிப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.