மேல் மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன.
இதற்கமைய 907 பாடசாலைகள், இன்று முதல் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
மேலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே குறித்த பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று மேல் மாகாணத்தில் அதிகரித்து காணப்பட்டமையினால் அங்குள்ள பாடசாலைகளை திறப்பதற்கு இதுவரை காலமும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டன. எனவே முதற்கட்டமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ்வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏனைய மாணவர்களுக்கும் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உரிய பாதுகாப்புடன் பாடசாலைகளை திறப்பதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெறும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு மேல் மாகாணத்தில் 79 ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.