ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதற்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலான 7 நாள்கள் நடைபெற்றது.
கடந்த 22 ஆம் திகதி மாலை இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 121 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவந்த நிலையில் இன்று மாலை விவாதம் நிறைவடைந்து, வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.