குடிவரவு – குடியகல்வுச் சட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவைக் கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது எனக் கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.
இந்த வழக்கில் முன்னதாக, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மற்றும் உதார முஹந்திரம்கே தலைமையிலான சட்டத்தரணிகள் குழு பிரதிவாதியைக் கைது செய்யுமாறு கோரியது.
போதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் டயனா கமகேவைக் கைது செய்ய முன்வரவில்லை என்று அவர்கள் மன்றுரைத்தனர்.
எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் டயனா கமகேவைக் கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றில் கோரியிருந்தனர்.
இதையடுத்து இன்று தமது முடிவை அறிவித்த நீதிவான், இராஜாங்க அமைச்சரை உரிய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சட்டத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
எனவே, இது தொடர்பில் தாம் உத்தரவு பிறப்பிப்பது தேவையற்றது என்று நீதிவான் தெரிவித்தார். அதன்பின், வழக்கை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டார்.