செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தையிட்டியில் தொடரும் மக்கள் போராட்டம்!

தையிட்டியில் தொடரும் மக்கள் போராட்டம்!

2 minutes read

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டியில் தமிழ் மக்களின் காணியில் அடாத்தாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரையை அகற்றவும் – காணிகளை விடுவிக்கவும் கோரிய போராட்டம் நேற்றும் இரவிரவாகத் தொடர்ந்தது. இதேநேரம், இந்தப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிகளவான மக்கள் இந்தப் போராட்டத்தில் அணிதிரள வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தையிட்டியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த விகாரையை அகற்றவும் – அதைச் சுற்றியுள்ள சுமார் 100 பரப்புக் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் மக்கள் நேற்றுமுன்தினம் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

நேற்றுமுன்தினம் இரவும் இந்தப் போராட்டம் தொடர்ந்த நிலையில் அங்கு படைத்தரப்புகள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன், போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. அத்துடன், போராட்டக் களத்தில் நின்ற ஐவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், நேற்று மாலை போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு நேரில் சென்ற மல்லாகம் நீதிவான் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று அனுமதி வழங்கியதுடன் விகாரைக்கு எதிரில் போராடவும் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து நேற்று இரவும் மக்கள் திரண்டு போராட்டம் தொடர்ந்தது. ஆனாலும், பொலிஸார் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமான செயற்பாடுகளைத் தொடர்ந்திருந்தனர்.

“நீதிமன்றக் கட்டளையை மீறி நடமாடினால் கைது செய்யப்படுவீர்கள்” என்று அவர்கள் போராட்டக்காரர்களை மிரட்டியதுடன் தொடர்ச்சியாக அவர்களை குழப்பும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

இதேசமயம், போராட்டம் ஆரம்பித்தது முதல் நேற்றைய தினமும் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தொடர்ச்சியாகப் பங்கேற்றிருந்தார். அவருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன், த.சித்தார்த்தன், அங்கஜன்இராமநாதன் ஆகியோரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்ததுடன் போராட்டத்திலும் பங்கேற்றிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More