யாழ்ப்பாணம், தையிட்டியிலுள்ள சட்டவிரோத பௌத்த விகாரையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும், பொதுமக்களின் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரியும் மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கும் வகையில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிரான போராட்டத்தைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில், இன்று (29) மற்றுமொரு கட்டப் போராட்டத்தை மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி., ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் ஆகியோருடன் கட்சியின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பௌத்த மதத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த தினமான நாளைய (30) போயா பொதுவிடுமுறையை மையப்படுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகளுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொள்கை அடிப்படையில் ஜனநாயக ரீதியாகவும் சட்ட ஒழுங்குகளை மீறாத வகையிலும் போராட்டக் கலாசாரத்தை முன்னெடுத்து வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் போராட்டம் நாளை (30) மாலை 7.00 மணி வரை தொடரும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ள நிலையில், விகாரை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.