Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கைது மூலம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை! – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம்

கைது மூலம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை! – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம்

1 minutes read

கைதுகள் மூலம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலைகளை இலங்கை அரசு தொடர்ந்தும் நிகழ்த்தி வருகின்றது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கு.துவாரகன், செயலாளர் சோ.சிந்துஜன் ஆகியோரின் ஒப்பத்துடன் வெளியாகியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த வாரம் இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான பயணத்தின் போது அறவழியில் போராடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி ஜெனிற்றா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையை மாணவ சமுதாயமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டிப்பதோடு, அப்பட்டமான ஜனநாயக உரிமை மீறலாகவும் இதனைப் பதிவு செய்கின்றது.

அனைத்துலகச் சமூகத்தின் முன்னால் ஜனநாயக உரிமைகள் வழங்கப்படுவதாக ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு, அறவழியில் போராடிய மக்களின் உரிமையினை கிஞ்சித்தும் பொருட்படுத்தாது கைதுகள், விசாரணைகள் மூலமாக அடக்கியொடுக்குவதற்கு முயலும் இந்த இலங்கை அரசின் போக்குகள் உலக அரங்கின் முன்னால் வெட்ட வெளிச்சமாக்கப்பட வேண்டியவையாகும்.

இலங்கை அரச படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நியாயமானதும் நீதியானதுமான பதிலொன்றைக் கூறுவதற்கு இயலாத அரசு, அவற்றுக்கான பதில் கோரிப் போராடும் உறவுகளை இன்று வரையில் வீதியில் விட்டுள்ளதோடு, அவர்களுக்கான பரிகாரநீதியையும் மறுத்து வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தங்கள் உறவுகளுக்கு நேர்ந்த கதிக்கு பதில் கோரி அறவழியில்ப் போராடும் உறவுகளின் போராடும் உரிமையையும் கருத்துரிமையையும் அடக்கியொடுக்கும் செயற்பாடாகவே வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி ஜெனிற்றாவின் கைது நோக்கப்பட வேண்டியுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகக் குரல் கொடுத்து வரும் இன்னபிற செயற்பாட்டாளர்கள், உறவினர்களைப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட அரச படைகள் அச்சறுத்தும் போக்கும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றது என்பது யாவரும் அறிந்ததே! இது போன்ற அப்பட்டமான ஜனநாயக மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசும் செயல்களில் ஈடுபடாமல், உளச்சுத்தியுடன் நிலையான நல்லிணக்கத்தை எட்டுவதற்கு முயல வேண்டும். தமிழ் மக்களை ஓரவஞ்சனையுடன் வஞ்சித்து விட்டு நல்லிணக்கம் பற்றிய உரையாடல்களை மேற்கொள்வதென்பது 21ஆம் நூற்றாண்டில் நவீன வடிவில் அடிமைத்தனத்தை தமிழ் மக்கள் மீது திணிக்க முயல்வதாகும்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More