இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடத்த வேண்டாம் என்று இடைக்காலத் தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற்குறித்த இடைக்காலக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 21 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற பொதுச் சபை கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
எனவே, குறித்த இரண்டு பொதுச் சபைக் கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்துக்கு முரணானதும் செல்லுபடியற்றன எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் அமைப்பு விதி அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச் சபைக் கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெரிவுகளின்போது வாக்களித்தமையால் குறித்த கூட்டம் சட்டமுரணானது எனவும் இதன்போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சமர்ப்பணங்களின் அடிப்படையில் எதிர்வரும் 19 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற இருந்த தேசிய மாநாட்டுக்குத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு இடைக்காலைத் தடை உத்தரவு விதித்துள்ளது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கை திருகோணமலை, சாம்பல்தீவு, கோணேஷபுரியைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சந்திரசேகரம் பரா என்பவர் சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் ஊடாகத் தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசுக் கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.