செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “தமிழினத்துக்குத் துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்காதீர்கள்!”

“தமிழினத்துக்குத் துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்காதீர்கள்!”

2 minutes read
“தமிழினத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம். அது எமது தமிழின இருப்பைச் சிதைக்கும்.”

– இவ்வாறு தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியார் அடிகளார் தெரிவித்தார்.

“தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு இன்று யாழ். கொடிகாமத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் தீர்வை சர்வதேசத்திடம் வலியுறுத்தல் என்பது எவ்வளவு அவசியமானதோ அந்தளவுக்கு அரசியல் கட்சிகளின் ஒற்றுமையும் மிகமிக அவசியமானது. கூட்டாக இருந்த கட்சிகள் பிரிந்த காலம் போய் ஒரு கட்சிக்குள்ளேயே பெரும் பிளவு ஏற்பட்டிருக்கின்றது. தமிழர்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை கட்சிகள் தங்களுக்கு ஏற்றால்போல் முடிவு செய்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன்.

நீங்கள் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றீர்களா? தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு கட்சிகளும் எப்படிப்  பார்க்கின்றீர்கள்? ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உள்ளவர்கள் ஒன்றுக்கொன்று முரணான வெவ்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தும்போதும் தேசியத்துக்கு விரோதமான கருத்துக்களைத் தெரியப்படுத்தும்போதும் கட்சியின் நிலைப்பாடு என்ன?  நீங்கள் மக்களை ஒரு பொருட்டாகக் கருதுகின்றீர்களா? அப்படி நீங்கள் கருதினால் அரசியல் அரசியல் அறிவு, தமிழ்த் தேசியம் சார்ந்தவர்களிடம் இருந்து வருகின்ற கருத்துக்களையும் உள்வாங்கி உங்களது பார்வையைச் செப்பனிடுகின்றீர்களா?

உங்களுக்குள் இருக்கும் களைகளை ஏன் முளையிலேயே பிடுங்கத் தவறுகின்றீர்கள்? எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எப்படிக் கையாளப் போகின்றீர்கள்? ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக என்ன முடிவுகளை நோக்கி மக்களை நகர்த்தப் போகின்றீர்கள்? அந்த முடிவு சர்வதேசத்திடம் எமக்கான தீர்வுக்கான செய்தியாக அமையுமா?

நீங்கள் எடுக்கப் போகும் முடிவு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்காது எம்மைச் சர்வதேசம் நோக்கி வெளிப்படுத்த உதவுமா? இன்று இடம்பெறுகின்ற மண் பிடிப்பு, மதம்சார் நிலம் பிடிப்பு ஆகிய பல்வேறு ஆக்கிரமிப்புக்கள் நிகழும்போது மௌனமாக இருப்பது ஏன்? இந்த அநீதிக்கு எதிராக தீவிரமாக முன்நின்று செயற்படுபவர்களும் தங்களுடைய நிலையை மாற்றிக்கொள்வது எதற்காக? சர்வதேச நாடுகள் உங்களைக் கையாளுகின்றனவா? இந்தக் கையாடல் தமிழ்த் தேசியத்தையும் தமிழர்களின் எதிர்காலத்தையும் சிதைக்கும் நிலையில் நீங்கள் எவ்வாறு அதனைக் கையாளப்போகின்றீர்கள்?

கட்சித் தலைமை பிழையான வழிநடத்தலைச் செய்கின்றது என்றபோதும் உங்களது மௌனம் அதை ஏற்றுக்கொள்வதாக நாம் எடுத்துக்கொள்ளலாமா? இந்நிலை எமக்கு நீங்கள் செய்யும் மாபெரும் துரோகம் என எடுத்துக்கொள்வது மிகச் சரியானதே.

தமிழினத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் துரோகம் செய்துகொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் இருக்க வேண்டாம். அது எமது தமிழின இருப்பைச் சிதைக்கும். நீங்கள் எடுக்கின்ற முடிவுகளை அறிவுசார் பெரியோர்கள், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கத் தவறாதீர்கள். தமிழ்த் தலைமைகளின் சரியான ஏற்பாடும் ஒற்றுமையும்தான் எமக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்தும். அதனைத்தான் சர்வதேசமும் கவனிக்கும்.

மக்கள் உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழ்த் தேசிய பாதையில், இன விடுதலைப் பாதையில் செல்லட்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More