Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 42 மேலதிக வாக்குகளால் சபாநாயகருக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு!

42 மேலதிக வாக்குகளால் சபாநாயகருக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு!

2 minutes read

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்க்கட்சிகளால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக 117 வாக்குகள் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை மீறி சபாநாயகரால் அனுமதிக்கப்பட்டமை, பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசமைப்பை மீறி சபாநாயகர் செயற்பட்டமை ஆகிய இரண்டு பிரதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றப் பிரதிப் பொதுச்செயலாளர் ஷமிந்த குலரத்னவிடம் கடந்த 5ஆம் திகதி கையளித்தன.

சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே .வி.பி. ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 44 எம்.பிக்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

இதையடுத்து ஒழுங்குப் பத்திரத்தில் சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்வாங்கப்பட்டதுடன் மார்ச் 19, 20 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுப்பது என்று கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு கடந்த 19 ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேலும் ஒரு நாளை வழங்கி 21 ஆம் திகதியும் விவாதத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று 21ஆம் திகதி வரை மூன்று நாட்கள் விவாதம் இடம்பெற்றது. நேற்று மாலை 4.30 மணிக்கு விவாதம் முடிவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து பிரேரணை மீது வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கோரிய நிலையில், சபைக்குத் தலைமை தாங்கிய பிரதிச் சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ வாக்கெடுப்புக்காக கோரம் மணியை ஒலிக்க விடுமாறு உத்தரவிட்டார். அதன பிரகாரம் மாலை 4.40 மணியளவில் இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்த வாக்கெடுப்பின்போது பிரேரணைக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே .வி.பி., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். எனினும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. சபையில் இருக்கவில்லை.

அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக அரசுடன் இனணந்து எதிரணிப் பக்கத்தில் சுயாதீனமாகச் செயற்படும் ஏ.எல்.எம்.அதாவுல்லா, துமிந்த திஸாநாயக்க, நிமல் லான்ஸா உள்ளிட்ட எம்.பிக்கள் வாக்களித்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஏ.எச்.எம். பெளசி, வடிவேல் சுரேஷ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதேவேளை, சிறைப்படுத்தப்பட்டிருக்கும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றாத போதிலும் அவர் வாக்களிப்பில் கலந்துகொண்டு பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தார்.

அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கட்சித் தலைவர்களான அநுரகுமார திஸாநாயக்க, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட 33 பேர் கலந்துகொண்டிருக்கவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More