Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கூலிப்படைகள் தொழிலாளர்களைத் தாக்குகின்றன! சம்பள விடயத்தில் அரசு தோல்வி!! – மனோ காட்டம்

கூலிப்படைகள் தொழிலாளர்களைத் தாக்குகின்றன! சம்பள விடயத்தில் அரசு தோல்வி!! – மனோ காட்டம்

2 minutes read
தோட்டக் கம்பனிகள் கூலிப்படைகளை அமைத்துத் தொழிலாளர்களைத் தாக்குகின்றன எனவும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசு தோல்வியடைந்துள்ளது எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தொழில் அமைச்சு விவாதத்தில் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார உரை நிகழ்த்தி கொண்டிருக்கும்போது அவரை இடைமறித்து உரை நிகழ்த்திய மனோ கணேசன் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மனோ எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-

“தோட்டக் கம்பனிகள் கூலிப்படைகளை அமைத்து தொழிலாளர்களைத் தாக்குகின்றன. இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு கம்பனி  கூலிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி இங்கிரிய தும்பற தோட்டத்தில் நேற்றுமுன்தினம் கம்பனிக்காரர்களால் தொழிலாளர்கள்  தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நடவடிக்கை எடுக்கும்படி கிரியல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த பெரேராவுக்குப் பணித்துள்ளேன்.

நான் கடுமையாகத் தலையிடும் வரை பொலிஸ் அசமந்தமாக இருந்தது. தாக்குதல் நடத்தியவர்களை இரண்டு நாட்கள் தேடிய பொலிஸ் தற்போது அவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

மறுபுறம், தோட்டத் தொழிலாளர் சம்பளம் தொடர்பில் இந்த அரசு இந்த நிமிஷம் வரை தோல்வியடைந்துள்ளது. நீங்களும், ஜனாதிபதியும் உங்கள் வர்த்தமானி ஆவணக் கடதாசியை தூக்கிக் காட்டி, கொட்டகலையில்  “இதோ ரூ.1700/=” என்று சூளுரைத்தீர்கள். ஆனால், என்ன ஆனது? நீங்கள் சூளுரைத்து வாயை மூட முன் இங்கே கொழும்பில், கம்பனிக்காரர்கள் “முடியவே முடியாது” என்று கூறி நீதிமன்றத்துக்குப் போகின்றார்கள். கடந்த 5 வருடங்களாக “இதோ, அதோ, சம்பளம் உயர்வு  கிடைக்கிறது” என்று சொல்லி, இது இழுபட்டது. இனியும் இழுபடத்தான் போகின்றது.

தோட்டத்துறையில் “சிஸ்டம் சேஞ்ச்” என்ற முறை மாற்றம் செய்யாமல் அங்கே நிரந்தர தீர்வு ஒருபோதும் காண முடியாது. தோட்டங்களில் தினக்கூலி முறை ஒழிக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்கள் மீதான தாக்குதல் நடத்தக் கம்பனிகள் சுயேட்சை ஓய்வுத் திட்டத்தில் இராணுவத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் படையினரைக் கொண்டு கூலிப்படைகள அமைத்துள்ளார்கள். அந்தக் கூலிப்படைகள் தொழிலாளர்களின் மீது  வன்முறைப்பிரயோகம் செய்து தாக்குகின்றன. இரத்தினபுரி இங்கிரிய தும்பரை தோட்டம், கிரியெல்ல போலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது.

இது பற்றி எங்கள் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பிரதான அமைப்பாளர் சந்திரகுமார் எனது கவனத்துக்கு நேற்று கொண்டு வந்தார். உடனடியாக நான் கிரியல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த பெரேராவுக்குக் கடுமையாக இது பற்றி பணிப்புரை விடுத்தேன். அதுவரை அசமந்தமாக இருந்த பொலிஸ்  அதன் பின் தாக்குதல் நடத்திய நபர்களை தேடத் தொடங்கியது.

இந்த விடயத்தில் நான் தலையிட்ட பிறகு, சம்பந்தபட்ட சந்தேகநபர்களின் முகவர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ள தாக்குதலுக்குள்ளான தொழிலாளிப் பெண்ணைத் தொடர்பு கொண்டு  வழக்கை வாபஸ் வாங்கும்படி வலியுறுத்தியுள்ளார்கள். நான் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த காரணத்தால் தற்போது  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இது தொடர்ந்து நடக்கின்றது. கூலிப்படைகளை வைத்துத் தாக்குதல்கள் மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே நடக்கின்றன. ஒருபுறம் உரிய சம்பளம் இல்லை. மறுபுறம் வன்முறை. இது என்ன? மலையகப் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More