பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு 3வது சோதனையின் போதும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஒரு சிறிய காய்ச்சல், அதற்காக முகக்கவசம், ஊரடங்கு தேவையில்லை என்று கூறி வந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவுக்கு கடந்த 7 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்ட அவருக்கு கடந்த 15 ஆம் தேதி பரிசோதனை செய்ததிலும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிபர் போல்சனேரோ 3-வது முறையாக நேற்று முன்தினம் பரிசோதனை செய்துகொண்டதில் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், போல்சனேரோ நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், அவரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அதிபர், தனது இரண்டு வார தனிமைப்படுத்தலை நீட்டிப்பதாகவும், பயணத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.