ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்குப் பதிலாக அவர்களை பாதுகாத்து இந்த தொற்று நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனைத்து தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை ஆடை பிராண்ட் சங்கம் (SLABA) மற்றும் இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA) ஆகியன எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வங்கிக் கடன் நிவாரணம் பெற்றுக்கொள்ளல், ஆடை தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றல், கொவிட்19 வழிகாட்டுதல்களுக்கமைய ஆடை விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி பெறல், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடலில் பங்குபற்றிய பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி செயற்பாட்டிற்காக தனியான அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை ஆடை பிராண்ட் சங்கத்தின் தலைவர் லலந்த வதுதுர இதன்போது பிரதமருக்கு தமது சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.