நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரண்டு விமானங்களை மோதி தகர்த்தனர். இதில், 3,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச் சம்பவத்தின் 20ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இரட்டை கோபுர தாக்கு தலைத் தொடர்ந்து ஆப்கானில் நுழைந்த அமெரிக்க, நேட்டோ படைகள் அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து, தலிபான்களை விரட்டினர்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க, நேட்டோ படைகள் கடந்த மாதம் 31ம் தேதி முழுமையாக வெளியேறின. இதனால், இந்தாண்டு இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகி உள்ளது. அதிபர் பைடன், தாக்குதல் நடந்த 3 இடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். அதிபர் பைடனின் ஆடியோ உரையில், `இந்த தாக்குதல் ஒற்றுமையே நமது மிகப் பெரிய வலிமை என்பதை எனக்கு உணர்த்தியது,’ என்று கூறியுள்ளார்.