இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான அல்-அக்சா மசூதியில் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக காணப்படுவதுடன், பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது.
இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுவதுடன், ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன.
அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவதுடன், சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதனிடையே, ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான அல் அக்சா மசூதியில் நேற்று இரவு இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தினர். அப்போது முகமூடி அணிந்த சிலர் இரவு முழுவதும் வழிபாட்டு தலத்திற்குள் தங்கியுள்ளனர். அவர்கள் கற்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் மறைத்து வைத்திருந்தனர்.
இன்று காலை யூதர்கள் டெம்பிள் மவுண்ட் வழிபாட்டு தலத்திற்கு வழிபாடு நடத்த வருவதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், நேற்று இரவு அல்-அக்சா மத வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் அங்கு தங்கி இருந்த பாலஸ்தீனியர்களை வெளியேற்ற முயன்றுள்ளனர்.
அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த கற்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே இடையே அல் அக்சா வழிபாட்டு தலத்தில் மோதல் ஏற்பட்டது. மோதலின் போது இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டது.
இந்த மோதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய படையினர் கைது செய்தனர்.
அல் அக்சா வழிபாட்டு தல மோதலையடுத்து பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
காசா முனையில் இருந்து வீசப்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைந்தபோது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் ராக்கெட்டுகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்த ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து ஹமாஸ் ஆயுத கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.