இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.
அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார்.
அங்கு ஹமாஸ் போன்று மேலும் பல ஆயுத குழுக்களும் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆயுத குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதுகிறது.
இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் காசா முனையில் செயல்பட்டு வரும் ஆயுதக்குழுவின் மூத்த தளபதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் ஆயுதக்குழுவின் ராக்கெட் தாக்குதல் பிரிவு தளபதியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த மோதலுக்குப் பிறகு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.