எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த 2023ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று அவர் ஆற்றிய உரையின்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இதற்கமைய குறித்த பரீட்சையின் புதிய திகதி தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அடுத்த வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி, குறித்த பரீட்சையை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன அண்மையில் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன், உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடத்துவதற்கான யோசனையையும் அவர் முன்வைத்திருந்தார்.
குறித்த யோசனை பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பரீட்சைகள் ஆணையாளருக்கு உள்ளது என்று கல்வி அமைச்சர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய, உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதுடன், அதன் திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.