அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டோனால்ட் டிரம்பும் (Donald Trump), அவருடைய குடும்பத்தினரும் அவர்களின் சொத்து மதிப்பை உயர்த்திக்காட்டி மோசடி செய்திருப்பதாக நியூயோர்க் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
டிரம்ப், அவருடைய மகன்களான டோனல்ட் ஜூனியர் (Donald Junior) மற்றும் எரிக் (Eric) ஆகியோர் வர்த்தகத் தேவைகளுக்கு ஏற்ப டிரம்ப் நிறுவனங்களின் மதிப்பையும் அவருடைய சொத்து மதிப்பையும் உயர்த்திக் காட்டியிருப்பதாக நீதிபதி கூறினார்.
நியூயோர்க் உட்பட சில இடங்களில் செயல்படும் டிரம்ப் நிறுவனங்களுக்கான சான்றிதழ்களை இரத்துச் செய்யவும் நியூயோர்க் நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன், பாதிக்கப்படும் நிறுவனங்களை நிர்வகிக்கத் தற்காலிக அதிகாரியை நியமிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
நியூயார்க் மாநிலத்தில் டிரம்பின் வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தலைமைச் சட்ட அதிகாரி லெடிஷா ஜேம்ஸ் (Letitia James) கோரி வருகிறார்.
அவருடைய பணியை நீதிபதியின் தீர்ப்பு தற்போது எளிதாக்கியிருக்கிறது.
அதேவேளை, எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை என்று கூறும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.