இஸ்ரேல் மற்றும் காசாவில் நடந்து வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் உற்பத்தியை சீர்குலைக்கும் என்ற கவலை எழுந்துள்ளதை அடுத்து, உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய்களில் ஒன்றான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 2.25 டாலர் அதிகரித்து, 86.83 டொலராக இருந்தது. அதே நேரத்தில், அமெரிக்காவிலும் பெட்ரோலியப் கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனிய பகுதிகளில் பெருமளவு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால், மத்திய கிழக்கு நாடுகள் உலக அளவில் நடைபெறும் எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பின் தற்போதைய தாக்குதல் பல ஆண்டுகளாகத் தொடரும் சண்டையின் மிகப்பெரிய ஒரு தாக்குதலாகும்.
ஆனால், இஸ்ரேலின் மிகப்பெரிய கடல் எரிவாயு உற்பத்தி நிறுவனமான லெவியதன் வழக்கம் போல் தொடர்ந்து இயங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எரிசக்தி தொடர்பாக ஆய்வுகளை நடத்திவரும் சவுல் கவோனிக், “அருகில் உள்ள முக்கிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகியவற்றுக்கும் இது போன்ற தாக்குதல் மற்றும் பதற்றம் பரவக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக” உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி : இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் அப்டேட்: 1,200 பேர் பலி – 20 ஆயிரம் பேர் இடப்பெயர்வு
எண்ணெய் உற்பத்தியில் முக்கிய நாடான சௌதி அரேபியா, ஜூலை மாதம் ஒரு நாளுக்கு பத்து இலட்சம் பேரல்கள் வரை உற்பத்தி குறைக்கப்படும் என்று கூறியுள்ளது .
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபெக் + (Opec+) இன் மற்ற உறுப்பினர்களும், எண்ணெய் விலைகளை உயர்த்தும் முயற்சியில் உற்பத்தியைத் தொடர்ந்து குறைப்பதற்கு ஒப்புக்கொண்டனர்.
ஒபெக்+ உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 40% பங்கு வகிக்கிறது என்பதுடன், அந்த அமைப்பின் முடிவுகள் எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.