செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு எமது போராட்டத்தை ஒடுக்க திட்டம் | வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

எமது போராட்டத்தை ஒடுக்க திட்டம் | வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

2 minutes read

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க முயற்சிக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினது நிர்வாகிகள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, வடக்கு, கிழக்கில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், 39க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகளுக்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக இச்சங்கத்தினர் வவுனியாவில் இன்று (3) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளாகிய நாம் சர்வதேசத்திடம் நீதி கோரிய எமது போராட்டமானது பல இன்னல்களையும் துன்பங்களையும் சுமந்த போராட்டமாக பதினைந்து வருடங்கள் கடந்துள்ளது.

இங்கு மாறி மாறி ஆட்சிக்கு வரும் இலங்கை  அரசிடம் பல வழிகளிலும் நீதி கேட்டு நின்றோம். நீதி கிடைக்காத நிலையில் சர்வதேச நீதியை தேடி 2018ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஜெனிவா மற்றும் ஏனைய நாடுகளுக்கு சென்று வருகின்றோம்.

எட்டு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் தலைமைகளுக்கும் சிறீலங்கா காவல்துறை விசாரணை, புலனாய்வுத்துறை விசாரணை என அதிகளவில் மன உளைச்சல்கள், எண்ணிலடங்காத அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாம் எப்போதும் எமக்கான, நீதிக்கான போராட்டத்தை  கை விடப்போவதில்லை என உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.

இந்நிலையில் சர்வதேச சிறுவர் தினத்தன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கோண்டோம்.

வடக்கு, கிழக்கில் 1000க்கு மேற்பட்ட சிறுவர்கள், 39க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த குழந்தைகளுக்கு என்ன நடந்தது என மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கிறோம்.

இந்த குழந்தைகளை வலிந்து காணாமலாக்கிய விடயத்தில் உலகளாவிய ரீதியில் சிறீலங்கா முதலாம் இடத்தை பெற்று நிற்கிறது.

அண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி எஸ்.ஜெனித்தா அவர்களின் தலைமையில் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது போராட்ட இடத்துக்கு வந்த ஒரு நபர் தான் அநுரவின் ஆள் எனவும் இங்கு போராட்டம் செய்யவேண்டாம் எனவும் எச்சரித்தார். அதற்கு தாய்மார் இது ஜனநாயக போராட்டம். நாம் இதை ஏன் நிறுத்த வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அந்த நபர் மிக மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி கத்தினார். அவருடைய தொனியில் எமது போராட்டத்தை குழப்புவதற்காக அனுப்பப்பட்ட ஒருவராக எமக்கு தெரிந்தது.

இதையெல்லாம் கதைக்க நீர் யார் என்று கேட்ட போது, அந்த நபர் நான் அநுரவுடன் ஒன்றரை  வருடமாக இருக்கின்றேன். அவர் ஜனாதிபதியாக வந்துவிட்டார். அதனால் உங்களை போராட்டம் செய்ய விடமாட்டேன் என்று இறுமாப்புடன் கூறினாா். அதுமட்டுமல்ல, உங்களை எல்லாம் கைது செய்யப்போகிறேன் என்று தகாத வார்த்தைகளால் பேசி எமது தாய்மாரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார்.

இவர் ஜனாதிபதி அநுரவின் ஆளோ அல்லது பொலிஸாரின் ஆளோ  அல்லது புலனாய்வுத்துறையின்  ஆளோ  அல்லது வேறு யாருடைய ஆளோ  என்று தெரியாது. இங்கு குழப்பத்தை ஏற்படுத்தியவருக்கும் அவரை இயக்குபவருக்கும் நாம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், எமது போராட்டத்தை குழப்ப வரும் எவரானாலும் ஒன்றைப்  புரிந்துகொள்ள வேண்டும். நாம் உறவுகளை உயிருடன்  ஒப்படைத்துவிட்டு அவர்களை தேடிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த போராட்டத்தில் எம்முடன் இருந்த 280க்கும் மேற்பட்ட உறவுகளை நாம் இழந்துவிட்டோம். இதற்கு யாருமே பதில் சொல்ல முன்வரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். ஆகவே   எமது போராட்டம் எமக்கு சர்வதேச நீதி கிடைக்கும் வரை தொடரும் என பிரகடனப்படுத்துகின்றோம் என்றனர்.

இந்த ஊடக சந்திப்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி எம். உதயச்சந்திரா, செயலாளர் ரி .செல்வராணி உட்பட ஏனைய மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More