கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரியும் என ஹாங் காங் பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
இந்நிலையில் கொரோனா பற்றிய தகவல்கள் முன்னரே சீன அரசுக்குத் தெரியும் என சீனாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹாங்காங்கில் இருக்கும் வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்ற லி மெங் யான் என்ற பெண் விஞ்ஞானி இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள லி மெங் யான் இருக்கும் இடத்தைப் பற்றி குறிப்பிடாமல் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் பற்றி சீன அதிகாரிகளுக்குத் தெரியும். கொரோனா தொடர்பாக உலகத்துக்கும் உலக சுகாதார நிறுவனத்துக்கும் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை சீனாவுக்கு இருந்தது.
அப்போதே வைரஸ் பரவலில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். வைரஸ் தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி செய்ய ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு அனுமதியளிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது.
உலக சுகாதார அமைப்புடன் இணைந்திருக்கும் தனது சொந்த நிறுவனம், கொரோனா பற்றி மெளனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டதாக டாக்டர் யான் கூறினார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்து ஏப்ரல் 28-ம்தேதி கேத்தே பசிபிக் விமானம் மூலம் அமெரிக்கா வந்தடைந்தேன்.
சீன அரசிடம் நான் பிடிபட்டால் மிகவும் மோசமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன் அல்லது பிறரைப் போலவே நானும் காணாமல் போயிருப்பேன். சீனாவின் முக்கிய ஆராய்ச்சி மையத்தில் வேலைப்பார்த்த என்னுடைய தோழி கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய் என்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார். சீனா இதை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு டிசம்பர் 31-ந்தேதியே கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்தார்.
கொரோனா தொடர்பான செய்தியை உலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமெரிக்கா வந்தேன்.
இவ்வாறு லி மெங் தெரிவித்துள்ளார்.
உலக சுகதார மையத்தின் நிபுணர்கள் குழு கொரோன நோய் தொற்றின் அறிமுகம் குறித்து கண்டறிய சீனா சென்றுள்ள நிலையில், இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.