இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக, முல்லைத்தீவு மீனவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் நலன்புரி அமைப்புக்கள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளதாவது, “அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
குறித்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்படையினர் என பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டிருந்தபோதும் இதுவரை எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி மீனவர்கள் தாமே முன்வந்து, இந்திய இழுவைப் படகுகளை முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து விரட்டுவதற்காக படகுகளில் கடலுக்கு செல்லத் தயாராகியிருந்தனர்.
இதன்போது அங்கு வருகை தந்திருந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் குறித்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பான பிரச்சினையினை உரியவர்களுக்குத் தெரியப்படுத்தி, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தீர்வினைப் பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்தனர்.
ஆனாலும், இதுவரை குறித்த பிரச்சினை தொடர்பாக எந்ததொரு நடவடிக்கையையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை.
இந்நிலையிலேயே நாளை (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
எனவே குறித்த போராட்டத்திற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.