திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றது.
சுகாதாரத்துறையினரின் தகவல்படி கடந்த 06 நாட்களில் 66 கொவிட் தொற்றாளர்கள் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கிண்ணியா மற்றும் ஜமாலியா போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கும் மூதூர் பிரதேச பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கும் இத்தொற்று பரவியுள்ளது.
எனவே பொதுமக்கள் இச்சந்தர்ப்பத்தில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என நேற்றைய கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன் மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொவிட் பரவல் பற்றி அறிவித்தல்களை விடுத்து உரிய நடைமுறைகளை கடைப்பிடிக்க மக்களுக்கு தெரியப்படுத்துமாறு உரிய திணைக்கள தலைவர்களுக்கு ஆளுநரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மக்கள் இச்சந்தர்ப்பத்தில் மிக பொறுப்புடன் செயற்படல் வேண்டும். தமது பிரதேசத்தில் கொவிட் தொற்று பரவாவண்ணம் கிராமிய பாதுகாப்புக்குழுக்களை வலுப்படுத்தல் வேண்டும்.
அவதானம் மிக்க பிரதேச மக்கள் அநாவசிய பயணங்களை தவிர்ப்பதுடன் வயோதிபர்கள் மற்றும் தொற்றா நோய் உள்ளவர்களை வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருப்பதன் அவசியம் பற்றியும் இதன்போது ஆளுநரால் வலியுறுத்தப்பட்டது.