எட்டு வருடங்களுக்குப் பிறகு பாலு மகேந்திரா இயக்கியிருக்கும் படம் ‘தலைமுறைகள்’. கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் M.சசிக்குமார் தயாரித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். வினோதினி, “சரவணன் மீனாட்சி” ரம்யா, கார்த்திக் என்ற சிறுவன் உட்பட பலர் நடித்துள்ளனர். சசிகுமார் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவற்றிக்கும் மேலாக படத்தில் பாலு மகேந்திரா நடித்திருப்பது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. விரைவில் தலைமுறைகள் படம் திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி படத்தின் அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா, நமது உறவுகளை நாம் மறந்து விட்டோம், அதனை பற்றி இந்த நேரத்தில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்றும் தோன்றியது. நான் கேட்டவுடனேயே படத்தை தயாரிக்க சசிகுமார் சம்மதித்துவிட்டார். என்னுடைய மூன்றாவது படம் மூடுபனியில் தொடங்கி இன்று வரை இளையராஜாதான் எனக்கு இசையமைப்பாளர்.
இந்த படத்தில் அவரை இசையமைக்க கேட்டபோது சம்பளம் கொஞ்சம் தான் கொடுக்க முடியும், பட்ஜெட் படம் என்றேன். அவரோ சம்பளத்துக்கு தான் நான் உனக்கு இசையமைக்கிறேனா? என்று கேட்டு கொடுத்த சம்பளத்தை வாங்கி கொண்டு இசையமைத்து கொடுத்துள்ளார். படத்தில் சசிக்குமார் ஒரு காட்சியில் நடித்துள்ளார். பிரமாதமாக வந்துள்ளது. அவர் இன்னும் சில காட்சிகள் நடித்திருக்கலாமே என்று ஆசைப்பட்டதாக சொன்னார் என இவ்வாறு பாலு மகேந்திரா கூறினார்.
பாலுமகேந்திரா எந்தவித விளம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தலைமுறைகள் என்ற படத்தை இயக்கியுள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 75 லட்ச ரூபாய்க்குள் ஒரு நல்ல படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்து காட்டுவதற்காக இந்தப் படத்தை அவர் உருவாக்கி வருகிறார்.