வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்த தவறியதால் நடிகர் சரத்குமார் நடித்த அச்சம் தவிர் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை கடன் வசூல் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஐடிபிஐ வங்கி, கடன் வசூல் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: விஸ்வாஸ் பிலிம் நிறுவனம் மற்றும் இதர மூன்று நபர்கள் ஆறுமுகம் மற்றும் அப்துல்லா ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பதற்காக ரூ. 2.30 கோடி கடன் பெற்றனர். அவர்கள், அந்த இரண்டு திரைப்படங்களையும் நிறைவு செய்யவில்லை, கடனையும் திரும்ப செலுத்தவில்லை. இது தொடர்பாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வட்டியுடன் கூடிய கடனை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், அந்த நிறுவனம் சாலிகிராமத்தில் உள்ள சில சொத்துக்களை உத்தரவாதமாக வழங்கியது. ஆனால், அதன் மதிப்பு ரூ. 60 லட்சம் தான். அதனால், நிறுவனத்தின் முழுக்கடன் தொகையான ரூ.3.80 கோடிக்கு அது போதுமானதாக இல்லை. இந்த நிலையில் அந்த நிறுவனம் “அச்சம் தவிர்’ திரைப்படத்தை டிசம்பர் 13-ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனால், வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை திரும்ப செலுத்தும் வரை அச்சம் தவிர் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு கடன் வசூல் தீர்ப்பாயத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தீர்ப்பாயம், திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்க ஆரம்ப முகாந்திரம் உள்ளது.
எனவே, அச்சம் தவிர் திரைப்படம் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு வழக்கை தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.